ஒருநாள் போட்டிகளில் மாற்றம் உண்டா?
டி20ஐ வளர்க்க பாடுபட்ட ஐசிசி, தற்போது அது வளர்ந்து விட்ட நிலையில், அழிந்து வரும் டெஸ்ட் போட்டிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இடையே ஒருநாள் போட்டிகள் சற்றே தளர்ந்து வருகிறது என்பதை ஐசிசி கவனித்ததா? என்ற பதில் இல்லாத கேள்வி இருக்கிறது. 2019 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளின் இரண்டு பந்து முறை மாறுமா?
ஒரே பந்து முடியாது
இது பற்றி ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கூறுகையில், "நாங்கள் உற்பத்தியாளர்களிடம் 50 ஓவர் வரை மறைந்து போகாமல் இருக்கும் பந்தை தயாரிக்க கேட்டு இருக்கிறோம். சரியாக பார்த்தால் ஒரு பந்து தான் இருக்க வேண்டும் (ஒருநாள் போட்டிகளில்). ஆனால், இப்போது நாம் இதை மாற்ற முடியாது" என தெரிவித்தார்.
மாற்றுக்கருத்து இருக்கிறது
மேலும், அவர் இந்த விஷயத்தை வேறு மாதிரி அணுகுகிறார். காரணம், அவர் கூறுகையில், "சில சுழல் பந்துவீச்சாளர்கள், பந்து எப்பொழுதும் கடினமாக இருக்கிறது. அதனால், நன்றாக எழும்புகிறது என்கிறார்கள். சிலர் அதை மறுக்கிறார்கள்" என கூறி இருக்கிறார். அதாவது வீரர்களே இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துக்களோடு இருக்கிறார்கள். எனவே, இதில் ஒரு மனதாக முடிவு எடுக்க முடியாது என சொல்லாமல் சொல்கிறார் ரிச்சர்ட்சன்.
13 நாடுகள் ஒருநாள் தொடர்
இருதரப்பு ஒருநாள் போட்டிகள் பற்றியும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. ஐசிசி 2023ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பைக்கு தகுதி பெற மிக நீளமான ஒருநாள் போட்டிகள் கிரிக்கெட் தொடரை வடிவமைத்துள்ளது. அதன் படி 13 அணிகள், ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று தொடரில் பங்கேற்கும். இந்த தொடர் ஒருநாள் போட்டிகளை வளர்க்க பயன்படும் என்கிறார் டேவிட் ரிச்சர்ட்சன்.