
டிராவிடுக்கு கிடைத்த கெளரவம்
கடந்த ஜூலை 2 அன்று டிராவிட்டின் பெயர் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான விழா, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியின் போது நடைபெற்றது. கவாஸ்கர் ஐசிசியின் நினைவுச் சின்னத்தை டிராவிடுக்கு வழங்கி பெருமைப் படுத்தினார். சச்சின், இணையத்தில் டிராவிடுக்கு வாழ்த்து செய்தியை வெளியிட்டார். இதை பார்த்த பலரும், சச்சினுக்கு ஏன் இன்னும் இந்த பெருமை கிடைக்கவில்லை என கேட்கத் துவங்கினர்.
[டிராவிடுக்கு கிடைத்த ஐசிசி கௌரவம்.. பெருமை டிராவிடுக்கு இல்லை ஐசிசி-க்கு தான்]

அது என்ன ஹால் ஆஃப் ஃபேம்?
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் எனப்படுவது காலத்தை தாண்டி சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் என பொதுவாக கூறப்படுகிறது. எனினும், இந்த பட்டியலில் இடம் பெற சில அடிப்படை விதிமுறைகள் உள்ளன. அதன் படி, ஒரு பேட்ஸ்மேன் டெஸ்ட் அல்லது ஒருநாள் என்ற இரண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் கடந்திருக்க வேண்டும் அல்லது இது இரண்டில் ஏதாவது ஒன்றில் 50க்கும் மேல் சராசரி இருக்க வேண்டும். இந்த முக்கிய விதியை வைத்து தான் இந்த பட்டியலுக்கு ஒரு வீரரை முன்மொழிய முடியும்.

சச்சினுக்கு தகுதி இருக்கே
மேற்கூறிய விதியை வைத்து பார்த்தால், சச்சின் எப்போதோ தகுதி பெற்று விட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலுமே சச்சின் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்களுக்கு மேல் எடுத்துள்ளார். டெஸ்டில் 18,426 ரன்கள் மற்றும் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 15,921 ரன்களும், 49 சதங்களும் எடுத்துள்ளார். ஆனாலும், இன்னும் ஒரு விதி சச்சினுக்கு இந்த பெருமையை கிடைக்க விடாமல் செய்து வருகிறது.

5 வருட விதி
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலுக்கு முன்மொழியப்பட ஒரு வீரர் குறைந்த பட்சம் 5 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடி இருக்கக் கூடாது. சச்சின் தன் கடைசி சர்வதேச போட்டியை நவம்பர் 16, 2013 அன்று ஆடினார். டிராவிட் தன் கடைசி போட்டியை 2012இல் ஆடினார். சச்சின் ஐந்து வருடங்களை எட்ட இன்னும் சில தினங்கள் உள்ளன. டிராவிட் சென்ற ஆண்டே ஐந்து வருடங்களை கடந்து விட்டார். இது தான் சச்சினுக்கு முன்னே டிராவிட், ஹால் ஆஃப் ஃபேம் பெருமையை பெற்றதற்கு காரணம். சச்சின் அடுத்த ஆண்டில் இந்த பெருமையை பெற அதிக வாய்ப்புள்ளது.

வெறும் 5 இந்தியர்கள் மட்டுமே
ஹால் ஆஃப் ஃபேம் பற்றி இந்தியர்கள் அதிகம் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. அதற்கு காரணம், இந்தியாவில் இதுவரை ஐந்து இந்திய வீரர்கள் மட்டுமே இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் பிஷன் சிங் பேடி, கபில் தேவ், சுனில் கவாஸ்கர், அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட். அதே சமயம் ஆஸ்திரேலியாவில் இதுவரை 25 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று விட்டனர்.


Click it and Unblock the Notifications