இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் நிறைய நடக்கணும் அதனால்.. உலகக்கோப்பை விதிகளை மாற்றத் துடிக்கும் ஐசிசி
துபாய்: இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை அதிகரிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி - ICC) புதிய அதிரடி திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்காக ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களின் தற்போதைய வடிவத்தை முற்றிலும் மாற்றியமைக்க ஐசிசி ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தைத் தரும் ஒன்றாக உள்ளது. எனவே, ஒரே உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மோதினால் இன்னும் அதிக லாபம் ஈட்டலாம் என்பதாலேயே ஐசிசி இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதன்படி, டி20 உலகக்கோப்பையில் தற்போது நடைமுறையில் உள்ள சூப்பர் 8 சுற்றுக்கு பதிலாக, அதனை சூப்பர் 10 சுற்றாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது சுற்றிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
அதேபோல், தென்னாப்பிரிக்காவில் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை 14-லிருந்து 12-ஆகக் குறைத்து, சூப்பர் 7 என்ற புதிய சுற்றை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூப்பர் 7 சுற்று மூலம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்பே மீண்டும் ஒருமுறை மோதும் வாய்ப்பு உருவாகும்.
இதற்கிடையில், டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் விறுவிறுப்பாக மாற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் ஐசிசி புதிய மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாக கூறப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இனி அரையிறுதி சுற்றுகளை அறிமுகப்படுத்தலாமா என ஐசிசி தனது ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசித்துள்ளது.
தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டுமே நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும் நிலையில், அரையிறுதிப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டால் அதிக அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளையும் இணைத்து மொத்தம் 12 அணிகளாக விரிவுபடுத்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

