மும்பை: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி பல அதிரடி மாற்றங்களை செய்து இருக்கிறது. இதில் சில மாற்றங்கள் இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து அறிமுகமாகி இருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. வரும் ஜூலை மாதம் இரண்டாம் தேதி முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 35 வது ஓவருக்கு பிறகு ஒரு பந்து தான் பயன்படுத்தப்படும் என்ற விதி அமலுக்கு வரப்போவதாக ஐசிசி அறிவித்திருக்கிறது.
இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டாப் க்ளாக் என்ற விதிகள் ஒருநாள் கிரிக்கெட் போல் டெஸ்ட் போட்டிகளுக்கும் அமலுக்கு வந்திருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையில் ஒரு நிமிடம் மட்டும்தான் நேரம் வழங்கப்படும். அதற்குள் அடுத்த ஓவரை பந்து வீசும் அணி தொடங்கி விட வேண்டும்.

நடுவர்கள் இரண்டு முறை மட்டும் 60 வினாடிக்கு மேல் சென்றால் வார்னிங் கொடுப்பார்கள். மூன்றாவது முறை இந்த தவறு நடந்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும். பந்து வீசும் அணி 80 ஓவருக்குள் இரண்டு முறை மட்டுமே ஒரு நிமிடத்திற்குள் மேல் பந்துவீச்சுக்கான இடைவேளை யை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படும்.
81வது ஓவரிலிருந்து 160வது ஓர் வரை மீண்டும் இந்த வார்னிங் முதலில் இருந்து ஆரம்பிக்கும். இதேபோன்று பந்தில் எச்சில் தடவினால் பந்தை மாற்றும் முறை அவசியம் கிடையாது என்று ஐசிசி அறிவித்துள்ளது. எனினும் எச்சியை பந்தில் தடவி பந்தின் வடிவம் மாறி இருந்தால் பந்தை மாற்றுவது குறித்து நடுவர்கள் முடிவு எடுக்கலாம். ஒருவேளை எச்சில் தடவி பந்து அபாயகரமாக மாறினால் பேட்டிங் செய்யும் அணிக்கு ஐந்து ரன்கள் வழங்கப்படும்.
இதேபோன்று டிஆர்எஸ் முடிவில் முக்கிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு பந்து பேட்டில் பட்டதாக கூறி விக்கெட் கீப்பர் கேட்சுக்கு அவுட் கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் ரீப்ளேவில் பந்து பேட்டில் படாமல் வெறும் (Pad) பேடில் தான் உரசி கொண்டு சென்றது என்றால் இது அவுட் இல்லை என கூறும் நடுவர்கள் மீண்டும் இது lbw என்று பார்ப்பார்கள்.
அப்போது பந்து ஸ்டெம்பில் பட்டது என்றால் கள நடுவர் நாட் அவுட் என கூறியிருப்பதன் மூலம் இது நாட் அவுட் என்று அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விக்கெட் கீப்பர் கேட்ச்காக பார்க்கப்படும் டி ஆர் எஸ் ரிப்ளேவில் பந்து பேடில் பட்டது தெரிய வந்தால், lbw பார்க்கும்போது கள நடுவர் அவுட் என்று சொன்னதாக முடிவு எடுத்துக் கொள்ளப்படும்.
இதன் மூலம் பந்து ஸ்டெம்பில் ஓரத்தில் பட்டால் கூட அது அவுட் ஆக மாறிவிடும். இதேபோன்று ரன்கள் ஓடும்போது ஒரு பேட்ஸ்மேன் கிரீஸ்க்குள் பேட்டை வைக்காமல் ஓடிவிட்டால் இனி பேட்டிங் அணிக்கு ஐந்து ரன்கள் அதிரடியாக குறைக்கப்படும். மேலும் அடுத்த பந்தில் எந்த பேட்ஸ்மேன் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பந்து வீசும் அணியே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.