விடாது அச்சுறுத்தும் மழை.. இறுதிப்போட்டிக்காக ஐசிசி எடுத்த தடாலடி முடிவு..இந்த ரூல்ஸ் புதுசா இருக்கே
மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதால் வெற்றியாளரை தேர்வு செய்ய ஐசிசி புதிய முடிவை கையில் எடுத்துள்ளது.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் கோதாவில் குதிக்கின்றன.
இந்த போட்டியில் மெல்பேர்னில் உள்ள மைதானத்தில் நாளை ( நவம்பர் 13) மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த போட்டி நடைபெறுவதிலேயே தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழை வாய்ப்பு
மெல்பேர்ன் நகரத்தில் கடந்த 2 - 3 நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமையும் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அதாவது 100% மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையமே கூறியுள்ளது. இறுதிப்போட்டி ரிசர்வ் டேவாக நவம்பர் 14ம் தேதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அன்றைய தினத்திலும் 95 % மழை வாய்ப்பு இருக்கிறது.

10 ஓவர்கள் தேவை
சாதாரண போட்டிகளில் குறைந்தது 5 ஓவர்களை வைத்து வெற்றியாளரை தீர்மானிப்பார்கள். ஆனால் ஐசிசி-ன் நாக் அவுட் போட்டிகளில் குறைந்தது 10 ஓவர்களை வைத்து மட்டுமே முடிவு எட்டப்படும். எனவே ரிசர்வ் நாளிலாவது 10 ஓவர்கள் வீசப்பட்டே ஆக வேண்டும். இல்லையெனில் இரு அணிகளுமே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள்.

ஐசிசி புது முடிவு
இந்நிலையில் இந்த பிரச்சினைக்கு ஐசிசி புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஒரு போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால் முடிவை எட்ட 2 மணி நேரம் கூடுதலாக தரப்படும். இந்த கால அவகாசத்தை 4 மணி நேரமாக ஐசிசி உயர்த்தியுள்ளது. அதுவும் ரிசர்வ் நாளில் மட்டும் தான். அந்நாளில் 10 ஓவர்கள் போட்டியை நடத்தவாவது கூடுதல் நேரம் தேவைப்பட்டால் இந்த 4 மணி நேரம் பயன்படும்.

விதிமுறைகள்
நாளைய தினம் போட்டி ஒருவேளை 10 ஓவர்கள் ஆடப்பட்டு, மீதம் 10 ஓவர்கள் பாதிக்கப்பட்டால், விட்ட இடத்தில் இருந்து ரிசர்வ் நாளில் ஆட்டம் தொடங்கப்படும். ஒருவேளை 10 ஓவர்களாக குறைக்கப்பட்டு முதல் நாளில் ஆடி பாதிக்கப்பட்டிருந்தால், ரிசர்வ் நாளின் போது 20 ஓவர்களும் முழுவதுமாக நீட்டித்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications