டி.ஆர்.எஸ் சர்ச்சை
ஸ்டம்ப் மைக்கில் சென்று விராட் கோலி கடுமையாக பேசினார். அஸ்வினும், இதில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினார். 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே செயல்படுவதாக கே.எல்.ராகுல் குற்றஞ்சாட்டினார். இந்திய வீரர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், ஒரு பக்கம் ஆதரவும் வந்தது.
மைக்கேல் வாகன்
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய வீரர்கள் களத்தில் நடந்து கொண்டதை ஏற்று கொள்ளவே முடியாது என்றும், விராட் கோலி ஒரு கேப்டன் என்பதையே மறந்து செயல்பட்டார் என்றும் விமர்சனம் செய்தார். இதனால் விராட் கோலியை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்
ஐ.சி.சி. நடுவர்
இதனிடையே, களத்தில் விராட் கோலி இவ்வாறு நடந்து கொண்டது குறித்து ஐ.சி.சி. இந்திய அணி நிர்வாகத்திற்கு வெறும் எச்சரிக்கையுடன் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியும், தொலைக்காட்சி நிர்வாகமும் எவ்வித புகாரும் போட்டி நடுவருக்கு அளிக்கவில்லை என்பதால், இதுவரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
எச்சரிக்கை
இந்த நிலையில், விராட் கோலிக்கும், மற்ற இந்திய வீரர்களுக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படலாமே தவிர, தடை விதிக்க வாய்ப்பில்லை என்றும் ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19வது தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை இந்திய அணி நாளை மறுநாள் மேற்கொள்ள உள்ளது.