மும்பை : 2023 உலகக்கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை நடந்து முடிந்துவிட்டது. ஆனால், தற்போது இந்தியா ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டு இணையத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடரை நடத்தும் பிசிசிஐ உண்மையை மறைக்கிறதா? ஏன் இந்த விஷயம் குறித்து பிசிசிஐ அமைதியாக இருக்கிறது என டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கான டிக்கெட் விற்பனைக்கும் பிசிசிஐ தான் பொறுப்பேற்று இருக்கிறது. அதன்படி இந்த முறை இணையத்தில் டிக்கெட் விற்க முடிவு செய்யப்பட்டது..
டிக்கெட் விற்பனை : bookmyshow தளத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த செப்டம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பல ரசிகர்கள் சில நிமிடங்களிலேயே டிக்கெட் காலியானதால் ஏமாற்றம் அடைந்தனர். பிசிசிஐ மீது அப்போதே புகார் எழுந்தது. இணையத்தில் உண்மையிலேயே அதிக டிக்கெட்டுகள் விற்கப்பட்டதா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதிகரித்த விலை : இந்த நிலையில் செப்டம்பர் 4 முதலே மூன்றாம் நபர் டிக்கெட் விற்கும் தளங்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் கிடைக்கிறது என்ற தகவல் பரவியது. viagogo என்ற தளத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் 19 லட்சத்திற்கு விற்கப்படுவதாக தகவல் வெளியானது. மற்ற போட்டிகளுக்கும் 30 ஆயிரம் முதல் 9 லட்சம் வரை விலை வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
1 டிக்கெட் 57 லட்சமா? : இந்த தகவல் வெளியான உடன் பல ரசிகர்கள் அந்த தளத்திற்கு படையெடுக்கத் துவங்கினர் . அதன் விளைவாக டிக்கெட் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு சில மணி நேரத்திற்கு முன்பாக இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான ஒரு டிக்கெட் 57 லட்சம் வரை உயர்ந்துள்ளது.
பிசிசிஐ அமைதி : ஒரு மூன்றாம் கட்ட இணையதளத்திற்கு எவ்வாறு இத்தனை டிக்கெட்கள் கிடைத்தன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் தான் அதை அந்த தளத்தில் விற்பதாக கூறப்பட்டாலும், எப்படி நூற்றுக்கணக்கான டிக்கெட்கள் அடுத்த நாளே அங்கே விற்பனைக்கு வந்தன என்பதும் தெரியவில்லை. இது குறித்து விசாரிக்க வேண்டிய பிசிசிஐ அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.
விரக்தியில் ரசிகர்கள் : டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் பலர் தங்களை பிசிசிஐ ஏமாற்றி விட்டதாக விரக்தியில் புலம்பி வருகின்றனர். பாகிஸ்தான் ரசிகர்களும் அந்தப் போட்டிக்கான டிக்கெட் வாங்க முடியாமல் இருக்கும் நிலையில் அவர்கள் நாட்டுப் பணத்தில் சுமார் 2 கோடி அளவுக்கு டிக்கெட் விலை இருப்பதாக அவர்களும் புலம்பி வருகின்றனர்.
யார்? :சில ரசிகர்கள் பிசிசிஐ இணையத்தில் எத்தனை டிக்கெட்கள் உண்மையில் விற்கப்பட்டன என்பதை வெளிப்படையாக சொல்லாமல் மறைக்கிறது எனவும் கூறி வருகின்றனர். டிக்கெட்டுகளை இப்படி பிளாக்கில் விற்பது யார்? பதில் சொல்லுமா பிசிசிஐ?