கொழும்பு: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026க்கான இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போட்டி டிக்கெட்டுகள், ஆன்லைன் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே விற்பனை தளமான புக்மைஷோவை (BookMyShow) செயலிழக்கச் செய்தன. பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இந்தப் போட்டிக்கு உலகளாவிய ரீதியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதையே இது காட்டுகிறது.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை கடந்த புதன்கிழமை மாலை ஆன்லைனில் தொடங்கியது. கிரிக்கெட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா-பாகிஸ்தான் மோதல் தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால், இணையதளம் மற்றும் செயலி பெருமளவு நெருக்கடிகளை சந்தித்தன.டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே புக்மைஷோவின் இணையதளம் செயலிழந்தது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், " பணப்பரிமாற்றம் தோல்வியடைந்ததாகவும், நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதாகவும் புகாரளித்தனர். ஒரே நேரத்தில் வந்த அதிகப்படியான கோரிக்கைகள் தளத்தின் சர்வர்களை செயலிழக்கச் செய்தன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2026 பிப்ரவரி 7 அன்று தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 7 அன்று மும்பையின் வான்கடே மைதானத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி கொழும்பில், நெதர்லாந்துக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா பிப்ரவரி 12 அன்று டெல்லியில் நமீபியாவுடன் விளையாடும். பின்னர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுடனான போட்டி பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறும். இந்திய அணி தனது குரூப் சுற்றை அகமதாபாத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிராக முடிக்கும்.
பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய பின் பிப்ரவரி 10 அன்று அமெரிக்காவைச் சந்திக்கும். பிப்ரவரி 15 அன்று இந்தியாவுடனும், பின்னர் நமீபியாவுடனும் மோதும். பாகிஸ்தானின் அனைத்து குரூப் போட்டிகளும் கொழும்பில் உள்ள சிங்களர் விளையாட்டு கழகம் (Sinhalese Sports Club) மற்றும் ஆர் பிரேமதாசா ஸ்டேடியம் (R Premadasa Stadium) ஆகிய மைதானங்களில் நடைபெறும்.