சென்னை : பாகிஸ்தான் அணி ஏற்கனவே தோல்விகளால் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், மேலும் ஒரு அடி விழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இருந்தது.

அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்து வீசிய போது குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்காமல் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதாக அம்பயர்கள் போட்டி முடிந்த உடன் பாகிஸ்தான் அணிக்கு அபராதம் விதித்தனர்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்து இருந்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் 9 விக்கெட்களை இழந்து போராடி வென்றது. இதனால் கடைசி ஓவர்களில் பதற்றம் நிலவியது. அப்போது பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்களை வீழ்த்த, திட்டம் தீட்ட அதிக நேரம் எடுத்துக் கொண்டது.
அதனால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பாகிஸ்தான் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நான்கு ஓவர்களை வீசி இருந்தது பாகிஸ்தான். ஐசிசி விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதம் களத்தில் ஆடும் வீரர்கள் தவிர, அணியின் மாற்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுக்கும் சேர்த்து பொருந்தும். அதனால், இந்த அபராதம் பெரிய இழப்பாகும். ஒரு ஓவருக்கு 5 சதவீதம் என்ற அடிப்படையில் நான்கு ஓவர்களுக்கு 20 சதவிகித சம்பளத்தை அபராதமாக செலுத்த பாகிஸ்தான் அணயின் கேப்டன் பாபர் அசாம் ஒப்புக் கொண்டார்.
ஏற்கனவே, பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ஐந்து மாதமாக சம்பள பாக்கி இருப்பதாக ஒரு புகார் உள்ளது. இந்த நிலையில், போட்டி சம்பளத்திலும் கைவைத்து இருக்கிறது ஐசிசி. தோல்வி கொடுத்த அடியோடு இதையும் சந்திக்க வேண்டிய பரிதாப நிலையில் இருக்கிறது பாகிஸ்தான் அணி.
கள அம்பயர்கள் அலெக்ஸ் வார்ஃப் மற்றும் பால் ரீஃபெல், மூன்றாவது நடுவர் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் நான்காவது நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ ஆகியோர் இந்த அபராதத்தை விதித்தனர்.