துபாய்: ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் முதலிடத்தை பிடித்து அசத்திருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி இன்று தொடங்கியுள்ள நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் தற்போது அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் சுப்மன் கில் அபாரமாக விளையாடினார். இதில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் கில் சதம் அடித்தார். இதன் மூலம் கில் தற்போது ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

இதன் மூலம் கடந்த 2023 உலக கோப்பை தொடரிலிருந்து தொடர்ந்து பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாபர் அசாம் சரிந்து இருக்கிறார். பாபர் அசாம்க்கும், சுப்மன் கில்லுக்கும் 23 புள்ளிகள் வித்தியாசம் இருக்கின்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கில் அதிரடியாக விளையாடி ரன் குவித்தால் அவர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
இதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கின்றார். நியூசிலாந்து வீரர் டேரல் மிட்செல், ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இலங்கை வீரர் அசலங்கா எட்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார்.
இதே போன்று பாகிஸ்தானின் கேப்டன் முகமது ரிஸ்மான், ஆறு இடங்கள் முன்னேறி 15 வது இடத்தை கொடுத்திருக்கின்றார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரின் அரை சதம் அடித்த விராட் கோலி ஆறாவது இடத்திலும், ஸ்ரேயாஸ் ஒரு இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.
இதேபோன்று கே எல் ராகுல் 16-வது இடத்தில் இருக்கின்றார். அதேபோன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்திருக்கிறார். பௌலர்களுக்கான பட்டியலில் முன்னாள் சிஎஸ்கே வீரர், இலங்கை அணியின் தீக்சனா முதலிடத்தில் பிடித்திருக்கிறார். இதன் மூலம் ரசித் கான், இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளார். முஹம்மது சிராஜ் பத்தாவது இடத்திலும் ஜடேஜா 13-வது இடத்திலும் சமி 15 வது இடத்திலும் இருக்கிறார்கள்.