இஸ்லாமாபாத் : முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் தொலைக்காட்சி ஒன்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், பாப் உல்மருக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும் என பேசி இருக்கிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது.

இதை அடுத்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழுவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
2007 உலகக்கோப்பை தொடரின் போது தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பாப் உல்மர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். அப்போது பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்தது.
பாப் உல்மர் சில பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங் செய்து, அதனால் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருக்கலாம் என சந்தேகித்தார். இதனிடையே உலகக்கோப்பை தொடரின் பாதியிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். அது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்ற நிலை தற்போதைய பயிற்சியாளர்கள் குழுவிற்கும் ஏற்படும் என சூசகமாக மிரட்டி இருக்கிறார் அப்துல் ரசாக்.
தற்போதைய பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக கிராண்ட் பிராட்பர்ன் இருக்கிறார். அணியின் இயக்குனராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் இருக்கிறார். அதே போல, பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் என இந்த நால்வருமே தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்தான்.

மிக்கி ஆர்தர் முதலில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து பின் அணியின் இயக்குனராக மாறினார். அதன் பின், தென்னாப்பிரிக்காவில் இருந்து தனக்கு ஏற்ற பயிற்சியாளர்கள் குழுவை அழைத்து அணியை வழிநடத்தி வருகிறார். பாகிஸ்தான் அணியில் பெரும்பாலான முடிவுகளை மிக்கி ஆர்தர் தான் எடுக்கிறார். அப்துல் ரசாக், மிக்கி ஆர்தர் மற்றும் குழுவினரை தான் மிரட்டி இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் - அவுட் ஆனது. அடுத்து இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த இலக்கை எளிதாக எட்டி ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது
பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல் - ரவுண்டராக விளங்கிய அப்துல் ரசாக் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்து வருகிறார். பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை தோல்வியை அடுத்து அப்துல் ரசாக் செய்தி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது பேசுகையில், "பாப் உல்மரின் கதியையே அவரும் சந்திப்பார். தோல்விக்கு காரணமான வீரர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். பாகிஸ்தான் அணியிடம் நல்ல வேகப்பந்து வீச்சாளர்களோ, சுழற்பந்து வீச்சாளர்களோ இல்லை. வீரர்கள் அணிக்காக தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறார்கள்." என்றார் அப்துல் ரசாக்.
பாப் உல்மர் கதி உங்களுக்கும் ஏற்படும் என மிக்கி ஆர்தர் மற்றும் பிற தென்னாப்பிரிக்க பயிற்சியாளர்களை மிரட்டி இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போதைய பயிற்சியாளர் குழுவை தற்கொலைக்கு தூண்டுவோம் என கூறுகிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.