மும்பை : முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக், ஐஸ்வர்யா ராயை இழிவுபடுத்தும் வகையில் பேசியது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி அரை இறுதிக்கு முன்னேறாமல், லீக் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. அதனால், முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
அப்படி பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்யும் போது சம்பந்தமே இல்லாமல், ஐஸ்வர்யா ராயை உதாரணம் சொல்கிறேன் என ஒரு இழிவுபடுத்தும் வகையிலான உதாரணத்தை கூறினார் அப்துல் ரசாக். அப்போது அருகே இருந்த முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல் அவர் பேச்சுக்கு கை தட்டி சிரித்தனர்.

இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியதால் இந்திய ரசிகர்கள் பலர் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் அப்துல் ரசாக், ஷாஹித் அப்ரிடி மற்றும் உமர் குல்லை கடுமையாக கண்டித்தும், விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
அந்த வீடியோவில் அப்துல் ரசாக் பேசுகையில், "பாகிஸ்தான் அணியின் நோக்கம் என்ன என்பதை பற்றி நாம் பேச வேண்டும். நான் விளையாடும் போது எனது கேப்டன் யூனிஸ் கான் நல்ல நோக்கத்தை கொண்டு இருந்தார். அவர் அணிக்கு நன்மை செய்ய விரும்பியதால் நானும் அதைப் பார்த்து அணிக்காக நன்றாக ஆட வேண்டும் என நினைத்தேன். தற்போது பாகிஸ்தான் அணி குறித்தும், வீரர்கள் குறித்தும் நிறைய பேசுகிறார்கள். இப்போது வீரர்களை மெருகேற்றி வளர்க்க நல்ல நோக்கம் இல்லை என நான் கருதுகிறேன். நீங்கள் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு, நல்ல அழகான, குணமான குழந்தையை பெற நினைத்தால் அது நடக்காது. எனவே, நீங்கள் உங்கள் நோக்கத்தை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.
அதாவது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தவறான ஆட்களை அல்லது கேப்டனை வைத்து அணியை வளர்க்கப் பார்க்கிறது அது நடக்காது என சொல்ல வந்த அப்துல் ரசாக் சம்பந்தமே இல்லாமல், ஐஸ்வர்யா ராய் போன்ற அழகானவரை திருமணம் செய்து கொண்டால் அழகான குழந்தை பிறக்கும் என நினைப்பது நடக்காது என கூறினார்.
அவரது இந்த இழிவான உதாரணம் சமூக ஊடகங்களில் இந்தியர்கள் இடையே கொதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்துல் ரசாக் இதற்கு முன்பு ஒரு முறை, பும்ராவை குழந்தை பவுலர் எனக் கூறி கடும் விமர்சனத்தை சந்தித்தார். இப்போது கிரிக்கெட்டுக்கும், பாகிஸ்தான் அணிக்கும் சம்பந்தமே இல்லாத ஐஸ்வர்யா ராயை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரிதான நிலையில், அப்துல் ரசாக் அருகில் அமர்ந்து கைதட்டி சிரித்த ஷாஹித் அப்ரிடி, தான் அவர் என்ன பேசினார் என புரிந்து கொள்ளாமல் கை தட்டியதாகவும், அப்துல் ரசாக் பேசியதை வீட்டுக்கு வந்து வீடியோவில் தான் பார்த்ததாகவும், அவர் பேசியது தவறுதான் எனக் கூறினார். மேலும், தான் அப்துல் ரசாக்கிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறி மெசேஜ் அனுப்பி இருப்பதாகவும் விளக்கம் அளித்தார் அப்ரிடி.
மற்றொரு முன்னாள் வீரர் உமர் குல் மீதும் விமர்சனம் முன் வைக்கப்பட்ட நிலையில், அவர் தான் அப்துல் ரசாக் கிரிக்கெட் குறித்து செய்த விமர்சனத்துக்கு தான் கை தட்டியதாக கூறினார். அப்துல் ரசாக் பேசியது தவறுதான் என உமர் குல்-லும் கூறினார். அப்துல் ரசாக் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பாரா?