மும்பை : 2023 உலகக்கோப்பையில் எந்த அணியாலும் வெல்ல முடியாத இந்திய அணியின் வியூகத்தை உடைக்கும் வகையில் வேறு ஒரு வியூகம் வகுத்து இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்.
2023 உலகக்கோப்பை தொடரில் மற்ற அணிகளால் தொட முடியாத அளவுக்கு வலுவான அணியாக இந்தியா இருக்கும் நிலையில், அந்த அணியை அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் எப்படி வீழ்த்துவது என ஆடம் கில்கிறிஸ்ட் தனது வியூகத்தை வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
அவரது வியூகத்தின் முக்கிய அம்சமே டாஸ் வெற்றி தான். அதற்கு காரணம், இந்தியாவுக்கு எதிராக இரண்டாவதாக பேட்டிங் செய்வது கடினம் என அதற்கான காரணத்தையும் கூறினார். இந்தியா இந்த முறை உலகக்கோப்பை தொடரில் முதல் ஐந்து போட்டிகளில் சேஸிங் செய்து வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், அதைக் காட்டிலும் அடுத்த மூன்று போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த போது பெரிய வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது. அதற்கு காரணம், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் மாலை மற்றும் இரவு நேர மின் வெளிச்சத்தில், பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் விக்கெட்களை அள்ளியது தான்.
இதை சுட்டிக் காட்டி இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட், இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் டாஸ் வென்ற உடன் பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம், இரவு நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை சந்திப்பதை தவிர்க்கலாம். மதிய நேரத்தில் பேட்டிங் செய்து ரன் குவிக்க முயற்சி செய்யலாம். அதன் மூலம், இந்திய அணியின் பந்துவீச்சில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம் என கூறினார்.
மேலும், இந்தியா சேஸிங்கில் பலவீனமானது எனவும் நாம் கூறி விட முடியாது. எனவே, முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்களை குவித்து விட்டு, பின் இந்திய அணியை ரன் குவிக்க விடாமல் செய்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஆடம் கில்கிறிஸ்ட் கூறி இருக்கிறார்.
ஆடம் கில்கிறிஸ்ட் வியூகத்தின் படி டாஸ் வெற்றி இல்லாவிட்டால் கூட முதலில் பேட்டிங் செய்வது தான் முக்கியமாக உள்ளது. அதனால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முதல் வாய்ப்பே கிடைக்கும் என அவர் கருதுகிறார். இந்திய அணி அரை இறுதியில் நியூசிலாந்து அணியை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், ஆடம் கில்கிறிஸ்ட் இந்த வியூகத்தை கூறி இருக்கிறார்.
இந்திய அணியின் அரை இறுதிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. அங்கே இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய போது இலங்கை டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 357 ரன்கள் குவித்து, அடுத்து இலங்கை அணியை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டியது.
மற்றொரு அரை இறுதி நடைபெற உள்ள கொல்கத்தா மைதானத்தில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 326 ரன்கள் குவித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை 83 ரன்களில் சுருட்டியது. எனவே, ஆடம் கில்கிறிஸ்ட் ஏன் இந்த வியூகத்தை கூறி இருக்கிறார் என்பது புரியும்.