தரம்சாலா : விராட் கோலி விலகலுக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்ட போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், ரோஹித் சர்மா இன்று மிகச் சிறந்த, முதிர்ச்சி அடைந்த கேப்டனாக மாறி இருக்கிறார் எனவும், சிலர் ரோஹித் சர்மா எல்லாம் இந்திய அணிக்கு கேப்டனா? என விமர்சனம் செய்தார்கள். ஆனால், இப்போது அவர் ஒரு தலைவராக முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடருக்கு முன்பு வரையும் கூட ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. போட்டியில் அவர் எடுக்கும் சில முடிவுகள் தவறு என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்து வந்தனர். ஆனால், உலகக்கோப்பை தொடரில் அவரது கேப்டன்சி சிறப்பாக உள்ளது.

இதைப் பற்றி பேசிய ஆடம் கில்கிறிஸ்ட், சரியான நேரத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி உச்சம் தொட்டு இருப்பதாக கூறி இருக்கிறார். "ரோஹித் சர்மாவின் தலைமை பண்பும், கேப்டன்சியும் உண்மையிலேயே முதிர்ச்சியடைந்து சரியான நேரத்தில் உச்சத்தை எட்டியிருக்கிறது. தோனி மற்றும் விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக இருப்பது மிகவும் கடினமான வேலை. சிலர் ரோஹித் சர்மாதான் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்க வேண்டுமா? ஆனால், அவர் ஒரு தலைவராக மிகச் சிறப்பாக முதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என் நான் நினைக்கிறேன்" என்றார் கில்கிறிஸ்ட்.
மேலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடந்த சம்பவம் ஒன்றை உதாரணமாக கூறினார். அந்தப் போட்டியில் முகமது சிராஜ் அதிக பவுண்டரிகள் கொடுத்து வந்தார். ஆனாலும், அவரை நம்பி மீண்டும் ஓவர் கொடுத்தார் ரோஹித் சர்மா. அப்போது சிராஜ் விக்கெட் வீழ்த்தி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அது போன்ற சிறிய முடிவுகளில் ரோஹித் சர்மா முதிர்ச்சியுடன் இருப்பதாக கூறி இருக்கிறார் கில்கிறிஸ்ட்.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா நான்கு போட்டிகளில் ஆடி நான்கிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. எந்தப் போட்டியிலும் இந்தியா போராடி வென்றது என்று கூட சொல்ல முடியாது. அந்த அளவுக்கு எளிதான வெற்றிகளை பெற்றுள்ளது. அதற்கு ரோஹித் சர்மா கேப்டன்சி ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.