டெல்லி : ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கன் வீரர் ரஷித் கானுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து கோஷமிட்டனர்.
இந்திய அணி ஆடாத மற்ற உலகக்கோப்பை போட்டிகளுக்கு ரசிகர்கள் பெருமளவில் கூடாத நிலையில், இந்தப் போட்டிக்கு டெல்லியில் பெரும் கூட்டம் மைதானத்தில் திரண்டு இருந்தது.
அவர்கள் அனைவரும் ஆப்கன் அணியின் முன்னணி வீரர் ரஷித் கானுக்கு ஆதரவாக கோஷமிட்டு, அவருக்கு உற்சாகம் அளித்தனர்.

பொதுவாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சச்சின், கங்குலி, யுவராஜ் சிங், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்யும் போதும், களமிறங்கும் போதும் பெரும் கோஷமிட்டு அவர்களுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால், முதன் முறையாக வெளிநாட்டு கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தாலும் ரன் குவிப்பில் ஈடுபட்டது.
ஏழாவது விக்கெட்டுக்கு ஆட வந்த ரஷித் கானுக்கு மைதானத்தில் நுழையும் போதே பெரும் உற்சாக கோஷம் போட்டனர் டெல்லி ரசிகர்கள். அவர் பேட்டிங் ஆடிய போது ஒவ்வொரு ரன்னுக்கும் அவர் பெயரை சொல்லி அவருக்கு ஆதரவு அளித்தனர்.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 49.5 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி பந்துவீச்சில் நன்றாக செயல்பட்டாலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதனால் ஆப்கானிஸ்தான் அணி எளிதாக பெரிய ஸ்கோரை எட்டியது.
ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். இக்ரம் அலிகில் 58 ரன்கள் எடுத்தார். ரஷித் கான் 22 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்து தன் பங்களிப்பை அளித்தார். பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட ரஷித் கான் இங்கிலாந்து அணிக்கு மிகக் குறைவான ரன்களையே விட்டுக் கொடுத்தார்.