அகமதாபாத் : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அணி என்றால் அது ஆப்கானிஸ்தான் தான் பலம் குன்றிய அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் செய்த சம்பவம் காலம் முழுவதும் பேசப்படும்.
1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா செய்த சாதனைக்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான் செய்த சாதனை பார்க்கப்படும். பலம் வாய்ந்த பாகிஸ்தான் இலங்கை போன்ற அணிகளை வீழ்த்தி இந்தியாவுக்கு பிறகு இரண்டாவது பலம் வாய்ந்த ஆசிய அணி என்ற பெருமையை தற்போது ஆப்கானிஸ்தான் பெற்றிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வளர இந்தியா பெரும் பங்கு வகித்திருக்கிறது. இந்தியாவின் கிரிக்கெட் மைதானங்களை ஆப்கானிஸ்தான் பயன்படுத்தி இங்குதான் பயிற்சிகளை பெற்று வந்தது. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது போல் இந்திய கிரிக்கெட் நிர்வாகம், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்குபல உதவிகளை செய்திருக்கிறது.
இந்த நிலையில் அதற்கு கைமாறு செய்யும் விதமாக ஆப்கானிஸ்தான் வீரர்கள் செய்த காரியம் ரசிகர்களை மகிழ்ச்சியின் வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது. தீபாவளி திருநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஏழைகளுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் பணம் வழங்கி உதவி செய்திருக்கிறார்.
ஆனால் அந்த ஏழைகளுக்கு இது குர்பாஸ்தான் என்று கூட தெரியாது. அந்த அளவுக்கு வறுமையால் அவர்கள் வாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக காரிலிருந்து இறங்கி குர்பாஸ் உதவி செய்திருக்கிறார். இதனை அந்த வழியாக சென்ற ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் குர்பாசை கொண்டாடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களே கிரிக்கெட்டை நம்பி தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்திய வீரர்கள் போல் வருமானம் எல்லாம் கிடைக்காது. ஆனால் தங்களிடம் இருந்த காசை ஏழை மக்களுக்கு கொடுத்து தீபாவளி கொண்டாட உதவிய சம்பவம் ரசிகர்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.