டெல்லி : ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜா போட்டு கொடுத்த திட்டத்தை அந்த அணியின் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் செயல்படுத்தினார்.
ஆனால், முதல் சில ஓவர்களிலேயே ஆப்கானிஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்பதை கண்டு கொண்ட இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், அதற்கேற்றார் போல பவுலிங்கை மாற்றினார். அதனால் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியை 300 ரன்கள் எடுக்க விடாமல் தடுத்தது.

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன 2023 உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் சத்ரான் துவக்கம் அளித்தனர். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் ரீஸ் டாப்லி முதலில் பந்து வீசினர். அப்போது கிறிஸ் வோக்ஸ் ஓவர்களில் மட்டும் குறி வைத்து ரன் குவித்தது ஆப்கானிஸ்தான்.
ஆப்கானிஸ்தான் அணியின் ஆலோசகர் அஜய் ஜடேஜா இங்கிலாந்து அணியின் முதன்மை பந்துவீச்சாளர்களான கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஓவர்களில் அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்துமாறு கூறி இருக்கிறார். அதை குர்பாஸ் - சத்ரான் ஜோடி சரியாக செயல்படுத்தியது.
குறிப்பாக வோக்ஸ் ஓவர்களில் குறி வைத்து பவுண்டரி அடித்தார் குர்பாஸ். வோக்ஸ்-இன் முதல் மூன்று ஓவர்களில் 7, 14 மற்றும் 10 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், டாப்லி வீசிய மூன்று ஓவர்களில் 0, 4, மற்றும் 10 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
இதை அடுத்து வோக்ஸ் பந்துவீச்சை நிறுத்திய இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர், சாம் கர்ரனுக்கு ஓவர் கொடுத்தார். இப்போதும் சாம் கர்ரன் வீசிய அவரின் முதல் இரண்டு ஓவர்களில் 6 மற்றும் 20 ரன்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. ஆனால், சாம் கர்ரன் வீசிய அதே ஸ்பெல்லில் டாப்லி வீசிய 8வது மற்றும் 10வது ஓவரில் 4 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான் அணி.
இதில் இருந்தே ஆப்கானிஸ்தான் அணி கிறிஸ் வோக்ஸ் மற்றும் சாம் கர்ரனை குறி வைப்பதை கண்டு கொண்ட இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் அவர்களுக்கு ஓவர் கொடுப்பதை நிறுத்தினார்.
பின்னர் சாம் கர்ரனுக்கு 44வது ஓவரை அளித்தார் ஜோஸ் பட்லர். அப்போது ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து இருந்ததால் சரியான பேட்ஸ்மேன் இல்லாத நிலையில், கர்ரன் அந்த ஓவரில் 2 ரன் மட்டுமே கொடுத்தார்.

சரி, இனி கர்ரன் ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி ரன் குவிக்காது என நம்பி 46வது ஓவரையும் அவருக்கே அளித்தார் பட்லர். அந்த ஓவரில் முஜீப் உர் ரஹ்மான் அதிரடி ஆட்டம் ஆடி 2 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து 18 ரன்கள் சேர்த்தார்.
இங்கிலாந்து அணியின் மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லாம் 6 ரன்களுக்கும் குறைவாக கொடுத்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் 4 ஓவர்களில் 41 ரன்களும், சாம் கர்ரன் 4 ஓவர்களில் 46 ரன்களும் கொடுத்து இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் குவித்தது. அஜய் ஜடேஜா திட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.