லக்னோ : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா தான் ஆடிய ஐந்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது, மற்ற அணிகள் அனைத்துமே ஒரு போட்டியிலாவது தோல்வி அடைந்துள்ளன. இந்திய அணி இந்த வெற்றி தோல்வி கணக்கில் மட்டுமில்லாமல், போட்டியை எதிர்கொள்ளும் வகையிலும் மற்ற அணிகளை விட முன்னிலையில் உள்ளது.
இந்த பெரிய மாற்றத்துக்கு என்ன காரணம்? யார் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியது? நிச்சயம், இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் ரோஹித் சர்மா தான்.
தோனிக்கு இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோலியின் அணுகுமுறை ஆக்ரோஷமாக இருந்ததை நாம் அறிவோம். ஆனால், அவரால் குறிப்பிட்ட இருதரப்பு ஒருநாள் தொடர்களையும், டெஸ்ட் தொடர்களையும் வெல்ல முடிந்ததே தவிர, ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களையோ, சாம்பியன் ட்ராபி தொடரையோ வெல்ல முடியவில்லை.
அதற்கு முக்கிய காரணம், கேப்டனாக கோலியின் தவறான அணுகுமுறை. அவர் ஒவ்வொரு தொடருக்கும் அணியில் வீரர்களை மாற்றிக் கொண்டே இருந்தார். எதிரணியின் பலம், பலவீனத்தை வைத்தும், பிட்ச்சை வைத்தும் அணியில் அதிக அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தன. அது சில இருதரப்பு தொடர்களில் இந்திய அணிக்கு கை கொடுத்தது. அதே சமயம், அணியில் வீரர்கள் தங்களுக்கு அடுத்த போட்டியில் இடம் கிடைக்குமா? அடுத்த தொடரில் இடம் கிடைக்குமா? என தெரியாமல் தன்னம்பிக்கை இன்றி இருந்தார்கள்.

தொடருக்கு தொடர் வீரர்களை மாற்றுவது, போட்டிக்கு போட்டி வீரர்களை மாற்றுவது என்ற அணுகுமுறை உலகக்கோப்பை போன்ற பல அணிகள் ஆடும் தொடர்களுக்கு ஒத்து வரவில்லை. ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு பலம், பலவீனம் கொண்ட அணிகள் ஆட வரும் போது அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யும் போது அணியின் சமநிலை மாறி விடும். போட்டியில் எந்த வீரர் என்ன செய்ய வேண்டும்? என்ற குழப்பம் ஏற்படும். தன் அணியை நம்பாமல், எதிரணியின் பலவீனத்தை நம்பி அணியை தேர்வு செய்ததால், இந்திய அணி கேப்டன் கோலி தலைமையில் எந்த பெரிய தொடரையும் வெல்லவில்லை.
இங்கே தான் கேப்டனாக ரோஹித் சர்மா பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். தன் அணியை நம்புவதே முதல் பணி என முடிவு செய்தார். ஆனாலும், முதலில் இந்திய அணிக்கு தேவையான 15 - 18 வீரர்களை கொண்ட உத்தேச அணியை தேர்வு செய்வது அவருக்கு சவாலாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் என தற்போது அணியின் முதன்மை வீரர்களாக இருக்கும் அனைவருமே காயத்தில் சிக்கி இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக குணமாகி அணிக்கு திரும்பவும், உலகக்கோப்பை வரவும் சரியாக இருந்தது. பின்னணியில் அதற்கான வேலைகளில் ஈடுபட்டது ரோஹித் - டிராவிட் கூட்டணி.
உலகக்கோப்பைக்கு சரியான அணி தேர்வான பின் கேப்டனாக கோலி செய்த தவறான அணுகுமுறையை மாற்றினார். தன் அணியை முழுமையாக நம்பினார். யார், யாருக்கு என்ன வேலை என்பதை தெளிவாக விளக்கி கூறினார். அதே போல, எதிரணியின் பலவீனத்துக்கு ஏற்ப அணியில் மாற்றம் செய்வதை நிறுத்தினார். அதிகபட்சம் ஸ்பின் பிட்ச் என்றால் மூன்று ஸ்பின்னர்கள், மற்ற பிட்ச்களுக்கு மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் என்பது மட்டுமே அவரது ஒரே மாற்றமாக இருந்தது.
அதே போல, ஒரு வீரர் காயமடைந்தால் அணியில் என்ன மாற்றம் செய்யப்படும் என்பது வீரர்களுக்கே புரியும் வகையில் தான் ரோஹித் சர்மாவின் அணுகுமுறை உள்ளது.
கோலி இந்த இடத்தில் தான் தவறுகளை செய்தார். ஆனால், அதை களைந்து ரோஹித் சர்மா தனது நேர்கோட்டில் பயணிக்கும் அணுகுமுறையால் கேப்டனாக வெற்றிகளை குவித்து வருகிறார். ரோஹித் சர்மா, தோனிக்கு பின் இந்திய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த கேப்டன் என்ற புகழை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.