மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வீரர் இப்ராகிம் சத்ரான் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா துவக்கத்திலேயே விக்கெட் எடுத்து ஆப்கானிஸ்தான் அணியை மிரட்டலாம் என நினைத்த நிலையில், 8 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், மற்றொரு துவக்க வீரர் இப்ராகிம் சத்ரான் கடைசி வரை களத்தில் நின்று நிதான ஆட்டம் ஆடினார். அவர் 143 பந்துகளில் 129 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் உலகக்கோப்பை தொடரில் சதம் அடிப்பது இதுவே முதல் முறை.

ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் உலகக்கோப்பை சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய அத்தியாயத்தை துவங்கி வைத்து இருக்கிறார் இப்ராகிம் சத்ரான்.
இந்தப் போட்டியில் இப்ராஹீம் சத்ரான் நின்று ஆட, மற்ற பேட்ஸ்மேன்கள் அவருக்கு ஒத்துழைத்து ஆடினர். ரஹ்மத் ஷா 30, ஷாஹிதி 26, ஓமர்சாய் 22, நபி 12 ரன்கள் எடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் ரஷித் கான் அதிரடி ஆட்டத்தால் கலக்கினார்.
ரஷித் கான் 18 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி இத்தனை பெரிய ஸ்கோர் அடித்தது கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் அணி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்தப் போட்டியில் 291 ரன்கள் எடுத்ததன் மூலம் உலகக்கோப்பையில் தன் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான். கடைசி 10 ஓவர்களில் மட்டும் 96 ரன்கள் சேர்த்த ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பையில் கடைசி 10 ஓவர்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன் என்ற சாதனையையும் பதிவு செய்தது.