சச்சின் செய்த விஷயம்.. என்னால் வார்த்தையால் சொல்ல முடியாது.. சதம் அடித்த ஆப்கன் வீரர் நெகிழ்ச்சி
மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராகிம் சத்ரான், இந்த போட்டிக்கு முந்தைய தினம் சச்சின் டெண்டுல்கர் தன்னிடம் பேசியது குறித்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டிக்கு முந்தைய தினம் ஆப்கானிஸ்தான் அணி வீரர்களை சச்சின் டெண்டுல்கர் நேரில் சந்தித்தார். அவர்களுக்கு ஊக்கம் அளித்து பேசினார்.
அப்போது ஒவ்வொரு வீரரையும் தனியே அழைத்து சில ஆலோசனைகளை வழங்கினார். ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர் இப்ராகிம் சத்ரானையும் தனியே அழைத்து பேட்டிங் குறித்த ஆலோசனைகளை வழங்கினார் சச்சின்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மற்ற வீரர்கள் குறைவான ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போதும் தூணாக நின்ற இப்ராகிம் சத்ரான், முதல் ஓவரில் இருந்து 50வது ஓவர் வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று 143 பந்துகளில் 129 ரன்கள் சேர்த்தார். அதனால, ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் சேர்த்தது.
உலகக்கோப்பை வரலாற்றில் முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றார் இப்ராஹீம் சத்ரான். சதம் அடித்த பின் பேசிய அவர் சச்சின் தனக்கு எந்த வகையில் ஊக்கம் அளித்தார் என தெரிவித்தார். 24 ஆண்டுகள் கிரிக்கெட் அனுபவம் கொண்ட சச்சின் தன் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டதை வார்த்தையால் விவரிக்க முடியாது என்றார் சத்ரான்.
சதம் அடித்த பின் இப்ராகிம் சத்ரான் பேசியது - "உலகக்கோப்பையில் முதல் சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்பது எனக்கு நல்ல உணர்வை அளிக்கிறது. நான் இன்னும் நிறைய சதம் அடிக்க விரும்புகிறேன். இந்த தொடருக்காக என்னை அதிகமாக தயார் செய்து கொண்டேன். பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான் சதத்தை தவறவிட்டேன். ஆனால், அடுத்த மூன்று போட்டிகளில் நான் சதம் அடிப்பேன் என நினைத்தேன். நேற்று சச்சினுடன் நன்றாக பேசினேன். அவர் என்னுடன் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். 24 ஆண்டு கால அனுபவம் கொண்ட சச்சின் என்னுடன் பகிர்ந்ததை என்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர் எனக்கு நிறைய தன்னம்பிக்கை அளித்ததற்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்." என்று கூறினார் இப்ராகிம் சத்ரான்.


Click it and Unblock the Notifications