பெங்களூர் : ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியின் இடையே டிஆர்எஸ் - ரிவ்யூ எனப்படும் அம்பயர் முடிவை மறுபரிசோதனை செய்யும் தொழில்நுட்பம் சில ஓவர்களுக்கு வேலை செய்யவில்லை.
தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின்சார நிறுத்தம் காரணமாக இந்த சம்பவம் நடந்த நிலையில், அதற்கு தொடரை ஏற்று நடத்தும் பிசிசிஐ தான் பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் உள்ளது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை பிசிசிஐ சரியாக செய்யவில்லை.
இதை அடுத்து பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இதுதான் உலகக்கோப்பை நடத்தும் லட்சணமா? இதைக் கூட ஒழுங்கா செய்ய மாட்டீர்களா? என வறுத்து எடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே ஆன போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 367 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 134 ரன்கள் வரை விக்கெட் இழக்காமல் சிறப்பாக ஆடியது.

அப்போது 16வது ஓவர் முடிந்த நிலையில், மின்சார நிறுத்தம் காரணமாக டிஆர்எஸ் தொழில்நுட்பத்தில் சிறிய கோளாறு இருப்பதாக மூன்றாவது அம்பயர், களத்தில் இருந்த அம்பயருக்கு தகவல் அளித்தார். இதை அடுத்து அந்த தகவல் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு சொல்லப்பட்டது.
இதனால், பேட்டிங் ஆடிக் கொண்டு இருந்த பாகிஸ்தான் வீரர்களும், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்-ம் குழப்பத்துக்கு ஆளானார்கள். ரிவ்யூ கேட்கவே முடியாதா? என அவர்கள் கேட்டனர். அதற்கு அம்பயர், ரிவ்யூ கேட்கலாம், ஆனால், குறிப்பிட்ட ரீப்ளே செய்யும் தொழில்நுட்பம் மட்டும் வேலை செய்யாது எனக் கூறினார்.
இரண்டு ஓவர்கள் முடிந்த பின் 19வது ஓவரில் துவக்கத்தில் அந்த கோளாறு சரி செய்யப்பட்டதை அறிவித்தார் அம்பயர். அதனால் ரிவ்யூ கேட்பதில் இருந்த சிக்கல் நீங்கியது. ஆனால், அதற்குள் இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவத் துவங்கியது. குறிப்பாக பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் இதை கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர் பணக்கார கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐ உலகக்கோப்பை நடத்தும் லட்சணம் இதுதானா? என கடும் விமர்சனத்தையும் முன் வைத்தனர்.