லக்னோ : ஆஸ்திரேலிய அணியின் மின்னல் வேக பவுலர் மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரால் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் தவிடு பொடியானது.
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது.

இந்தப் போட்டி நடந்த ஆடுகளம் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைத்தது. ஆனாலும், தென்னாப்பிரிக்கா அணி சமாளித்து ரன் குவித்தது. 49 ஓவரில் 310 ரன்கள் குவித்த அந்த அணி கடைசி ஓவரிலும் ரன் குவித்து 325 - 330 ரன்களை எட்ட திட்டம் போட்டது.
ஆனால், கடைசி ஓவரை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசினார். தந்து துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துகளுக்கு பெயர் பெற்ற ஸ்டார்க் அதற்கு முன்பு வீசிய ஓவர்களில் ரன்களை வாரிக் கொடுத்து இருந்தார். அதனால், கடைசி ஓவரிலும் தென்னாப்பிரிக்கா ரன் குவிக்கும் என்றே பலரும் எண்ணினர்.
ஆனால், நிலைமை வேறாக இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்தை மார்கோ ஜான்சென் சந்தித்தார். அந்த பந்தில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு வார்னரிடம் கேட்ச் கொடுத்தார் ஜான்சென்.
இரண்டாவது பந்து யார்க்கர் வீசிய ஸ்டார்க், அதை அடுத்து பேட்டிங் செய்ய வந்த ரபாடா காலில் பிட்ச் ஆகும்படி வீசினார். அப்போது ரபாடா சமாளித்து 1 ரன் ஓடி, அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லருக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார்.
மூன்றாவது பந்தில் ஸ்டார்க் அகலமான யார்க்கர் வீசினார். மில்லரால் பந்தை தொடக் கூட முடியவில்லை. நான்காவது பந்திலும் யார்க்கர் வீசினார் ஸ்டார்க். ஆனால், இந்த முறை மிடில் ஸ்டம்ப்புக்கு நேராக வீசினார். மில்லரால் இப்போதும் பந்தை தொட முடியவில்லை. பந்து ஸ்டம்ப்பை தகர்த்தது. மில்லர் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்த இரண்டு பந்துகளை கேசவ் மகாராஜ் சந்தித்தார். அவராலும் ஒரு பந்தையும் தொட முடியவில்லை. தென்னாப்பிரிக்கா அணி கடைசி ஓவரில் வெறும் 1 ரன் எடுத்து ஏமாற்றம் அடைந்தது. ஏற்கனவே, அதிக ரன்களை கொடுத்த ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டார்க் கடைசி ஓவரில் பெரும் ஆறுதல் அளித்தார்.
தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 311 ரன்கள் எடுத்தது. இதுவே நல்ல ஸ்கோர் என்றாலும், ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த நினைத்த தென்னாப்பிரிக்காவிற்கு கடைசி ஓவர் மட்டும் ஏமாற்றத்தை தந்தது.