கொல்கத்தா : உலகக்கோப்பை அரை இறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் வாழ்வா? சாவா? போட்டியில் ஆட இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், தன் சக வீரரை அழைத்துக் கொண்டு சேலை வாங்கச் சென்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவது 99 சதவீதம் முடியாத காரியம் என தகவல்கள் வெளியாகி வரும் அதே நேரத்தில் அவர் ஷாப்பிங் சென்ற தகவலும் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் நான்காம் இடம் பெற்று அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் நியூசிலாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அதற்கு இங்கிலாந்து அணியை 278 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்.
அந்தப் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் தோற்றால் உலகக்கோப்பையில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், கொல்கத்தாவில் உள்ள சவுத் சிட்டி மால் என்ற இடத்தில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்ய சென்று இருக்கிறார் பாபர் அசாம். அவர் உடன் சக வீரர் இமாம் உல் ஹக்கையும் அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார்.

பாகிஸ்தான் வீரர்கள் வெளியே செல்ல கடும் கட்டுப்பாடு இருக்கும் நிலையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், காவல்துறை புடைசூழ பாபர் அசாம், இமாம் உல் ஹக் அந்த மாலுக்கு சென்றுள்ளனர். பாபர் அசாமுக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க உள்ள நிலையில் அவர் அதற்காக ஏற்கனவே 7 லட்சம் ரூபாய்க்கு ஒரு திருமண ஆடை வாங்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் ஷாப்பிங் மாலில் தன் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சேலை வாங்கி இருக்கிறார். ஷிபான் கார்ஜெட் வகை சேலைகளை மட்டுமே குறிப்பிட்டு வாங்கிய அவர், அதில் ஏழு சேலைகளை வாங்கி இருக்கிறார்.
இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லா ஆண்களையும் போல சேலையை குத்து மதிப்பாக தேர்வு செய்து வைத்து விட்டு, வீடியோ காலில் தன் குடும்பபெண்களுடன் பேசி அவர்கள் விரும்பிய சேலைகளை தேர்வு செய்து இருக்கிறார். இந்த சேலைகளை தேர்வு செய்வதில் உதவி செய்யவே இமாம் உல் ஹக் உடன் சென்று இருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் தனக்கும் சில ஆடைகளை வாங்கிய அவர் அதிக விலை கொண்ட டாம் ஃபோர்ட் சன்கிளாஸ் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். சுமார் இரண்டு மணி நேரம் பாபர் அசாம் அந்த மாலில் ஷாப்பிங் செய்துள்ளார்.
ஆனால், அதற்குள் அவரை பார்க்க கூட்டம் கூடி விட்டது. அவருக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதால் காவல் துறையினரும், மால் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தவர்களும் தவித்துப் போய் இருக்கிறார்கள். பாபர் அசாம் சேலை வாங்குவதற்குள் அங்கே பெரிய அலப்பறையே நடந்து இருக்கிறது.
வெளிநாட்டுக்கு கிரிக்கெட் ஆடப் போகும் போது ஷாப்பிங் செய்வதில் தவறில்லை. ஆனால், அணி இக்கட்டான நிலையில் இருக்கும் போது அணியின் கேப்டன் சாவகாசமாக சேலை வாங்குவதெல்லாம் அணியின் வீரர்களுக்கே தவறான முன்னுதாரணம் ஆகி விடும். அது மட்டுமின்றி, போட்டியில் தோல்வி அடைந்தால் ரசிகர்கள் இதை சுட்டிக் காட்டி வெளுத்து விடுவார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.