கொல்கத்தா : பாகிஸ்தான் அணி 2023 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் குறிப்பிட்ட ஒரு போட்டியில் வென்று இருந்தால் கதையே வேறு மாதிரி ஆகி இருக்கும் என கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின் இந்தியாவுடன் தோல்வி அடைந்து கடும் விமர்சனத்தை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், அணிகளிடம் தோல்வி அடைந்தது பாகிஸ்தான். அதனை அடுத்து கடும் விமர்சனம் எழுந்ததை அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பந்துவீச்சில் கலக்கிய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்களை வீழ்த்தியும், தென்னாப்பிரிக்கா அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய போதும் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில், தன் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராகவும் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அதன் பின் பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், தென்னாப்பிரிக்கா போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இருந்தால் கதையே வேறு என கூறினார்.
தென்னாப்பிரிக்கா போட்டியில் வெற்றி பெற்று இருந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி இருக்கும் என்பதையே அவர் இப்படி கூறி இருக்கிறார். மேலும், பாகிஸ்தான் அணி பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் மோசமாக செயல்பட்டதையும் அவரே ஒப்புக் கொண்டார். ஸ்பின் பவுலிங் தொடர் முழுவதும் மோசமாக இருந்ததையும், அவர்கள் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தாமல் போனதையும் குறிப்பிட்டு இருந்தார் பாபர் அசாம்.
இங்கிலாந்து போட்டிக்கு பின் பாபர் அசாம் பேசுகையில், "ஆம், எங்கள் செயல்பாடு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தென்னாப்பிரிக்கா போட்டியை நாங்கள் வென்று இருந்தால், இங்கே கதையே வேறாக இருக்கும். ஆனால், நாங்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாவாற்றிலும் தவறுகளை செய்தோம். 20 - 30 ரன்களை அதிகமாக கொடுத்தோம். எங்கள் ஸ்பின்னர்கள் விக்கெட் எடுக்கவில்லை, மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்கவில்லை என்றால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நாங்கள் ஒன்றாக அமர்ந்து நல்ல விஷயங்கள் என்ன, தவறுகள் என்ன என பேசி இருக்கிறோம். நான் தொடர்ந்து அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன்" என்றார்.