மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்தியாவுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆனால் நெதர்லாந்துக்கும் வங்கதேசத்துக்கும் இன்றைய போட்டியில் முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனென்றால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணி தான் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் தற்போது புள்ளி பட்டியலில் ஏழு இடங்களை பிடித்த அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போது எட்டாவது இடத்தில் வங்கதேச அணி 9 போட்டிகளில் விளையாடி நான்கு புள்ளிகள் உடன் இருக்கிறது. இலங்கை அணி நான்கு புள்ளிகளுடன் தொடரை முடிவு செய்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்லும் வாய்ப்பு இழந்தது. ஆனால் நெதர்லாந்தை பொறுத்தவரை இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சி இருக்கிறது.
அதில் வெற்றி பெற்றால் அவர்கள் 6 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திற்கு வர முடியும். இதனால் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் அது வங்கதேசத்தின் வாய்ப்பை பாழாக்கிவிடும். இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் வங்கதேச அணி ரசிகர்கள் இந்தியாவுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் வங்கதேசம் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற்று விடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுகளையும் வன்மத்தையும் வங்கதேச ரசிகர்கள் கக்கி வந்தார்கள். ஆனால் தற்போது இந்தியாவின் தயவு இருந்தால் தான் அவர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்பு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனை சுட்டிக்காட்டி உள்ள இந்திய ரசிகர்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுது பாருங்க என்று கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் இன்று வங்கதேச ரசிகர்களின் முழு ஆதரவும் இந்தியாவுக்கு தான்.