டெல்லி : 2023 உலகக்கோப்பை தொடருக்காக பிசிசிஐ ஏற்பாடு செய்த ஒரு விஷயம் வீரர்களுக்கு கொடூரமாக இருப்பதாக மனம் விட்டு புலம்பி இருக்கிறார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்.
2023 உலகக்கோப்பை தொடரை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட பிசிசிஐ நாடு முழுவதும் பத்து மைதானங்களில் உலகக்கோப்பை போட்டிகள் நடக்கும் வகையில் பெரிய திட்டத்தை வகுத்தது. அதன் படி பாதி போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.
உலகக்கோப்பை போட்டிகளின் போது இடைவேளைகளில் மின்விளக்குகளால் நடத்தப்படும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது. அப்போது மைதானத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு அலங்கார மின் விளக்குகள் மூலம் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறும். அப்போது பாடல்களும் இசைக்கப்படும். அதற்கேற்ப அந்த மின்விளக்குகளின் ஒளி அசைவு இருக்கும்.

இந்த திடீர் ஒளி இருட்டில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு அற்புதமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், களத்தில் அடுத்து பந்தை சந்திக்க வேண்டிய பேட்ஸ்மேன், பவுலர் மற்றும் பீல்டர்களுக்கு கண்கள் கூசும். அடுத்த ஒரு நிமிடத்துக்கு அவர்களால் சரியாக பார்க்க முடியாது. தங்கள் கண்களை அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 தொடரிலேயே இது விமர்சனத்துக்கு உள்ளானது. ஆனால் தற்போது பிசிசிஐ, அதை உலகக்கோப்பை தொடரிலும் செயல்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியா - நெதர்லாந்து போட்டியின் போதும் டெல்லி மைதானத்தில் இடைவேளைகளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கிளென் மேக்ஸ்வெல் தன் கண்களை கையால் மூடிக் கொண்டார். அது குறித்து போட்டி முடிந்த உடன் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த மேக்ஸ்வெல், "கிரிக்கெட் வீரர்களுக்கு இது முட்டாள்தனமான விஷயம் என நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் மின் வெளிச்சம் திடீரென வரும் போது கண்களை அதற்கு ஏற்ப மாற்றிக் கொள்வது கடினமாக உள்ளது. இதே போல ஒரு நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் பிக் பாஷ் லீக் தொடரில் நடந்தது. அது எனக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தலைவலியை கொடுத்தது. என் கண்களை வெளிச்சத்துக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள சிறிது நேரம் ஆனது. அதனால், நான் என் கண்களை மூடிக் கொள்ள முயற்சி செய்தேன். இது மிக மிகக் கொடூரமான யோசனை. ரசிகர்களுக்கு நல்ல விஷயம். ஆனால், வீரர்களுக்கு கொடுமை" எனக் கூறினார்.
இப்படி ஒரு வீரர் புலம்பும் அளவுக்கு இருக்கும் அந்த நிகழ்ச்சி தேவையே இல்லை என்பதே பொதுவான ரசிகர்களின் கருத்து. அந்த மின் விளக்கு அலங்கார நிகழ்ச்சி மைதானத்துக்கு வரும் ரசிகர்களுக்கு மட்டுமே. தொலைக்காட்சியிலும், ஸ்ட்ரீமிங் மூலமும் பார்க்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்காக அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. அதனால், இனியாவது வீரர்களை கொடுமைப்படுத்தாமல் அந்த நிகழ்ச்சியை அனைத்து மைதானங்களிலும் பிசிசிஐ ரத்து செய்ய வேண்டும்.