மும்பை : இந்திய அணியின் முக்கிய ஆல் - ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து போட்டியில் விளையாட மாட்டார் என முதற்கட்ட தகவல்ககள் வெளியான நிலையில், தற்போது அவர் அரை இறுதி வரையும் கூட ஆடுவது சந்தேகம் தான் என பிசிசிஐ வட்டாரம் கூறி உள்ளது.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்பும் சரியான வீரர் யாருமே இல்லை. ஏற்கனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவை அணியில் சேர்த்து பாண்டியா இடத்தை நிரப்ப முயற்சி செய்தார் ரோஹித் சர்மா. ஆனால், மற்றொரு ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குர் ஷமிக்கு இடம் கொடுக்க வேண்டி நீக்கப்பட்டார். அதனால் அணியில் ஆல் - ரவுன்டரே இல்லாத நிலை ஏற்பட்டது.
அப்போது இந்திய அணி சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களுடன் ஆட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது ஹர்திக் பாண்டியா குறித்து வந்துள்ள தகவலால் இந்திய அணி பெரிய இக்கட்டில் மாட்டிக் கொண்டுள்ளது. தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று, அங்கேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் பாண்டியா.

அவரது உடல்நிலை பற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹர்திக் பாண்டியாவிற்கு கணுக்காலில் ஏற்பட்ட வீக்கம் குறைந்துள்ளது. அங்கே எலும்பு முறிவு ஏற்படவில்லை. அவர் விரைவில் குணமடைவார். ஆனால், அவரை அவசர அவசரமாக போட்டிகளில் பங்கேற்க வைத்தால் அதனால் அவர் காயம் மோசமாக மாறலாம். அதனால், அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை. அவர் இன்னும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை. அதற்கு சில நாட்கள் ஆகலாம் என்று தெரிவித்தார்.
அதனால், ஹர்திக் பாண்டியா தற்போதைய திட்டப்படி உலகக்கோப்பை தொடரில் லீக் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு முன் தயாராக வாய்ப்பு உள்ளது. அப்போது தென்னாப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளை இந்தியா சந்திக்கும். ஆனால், பிசிசிஐயின் முக்கிய திட்டமே அரை இறுதிக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா முழுமையாக தயார் ஆக வேண்டும் என்பது தான். அதனால், அந்த கடைசி இரண்டு லீக் போட்டிகளில் கூட அவர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே பங்கேற்பார்.
இந்த சூழ்நிலையில், கேப்டன் ரோஹித் சர்மா பாண்டியா இழப்பை எப்படி ஈடு கட்டி கடைசி நான்கு லீக் போட்டிகளில் அணியை வெற்றிப் பாதையில் அழைத்து செல்லப் போகிறார் என்பதே பெரிய கேள்வியாக உள்ளது.