மும்பை : இந்திய அணியில் வாய்ப்பின்றி இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஓராண்டாக மோசமான ஃபார்மில் இருந்த புவனேஸ்வர் குமார் தற்போது உச்சகட்ட ஃபார்முக்கு திரும்பி இருக்கிறார்.
பிசிசிஐ நடத்தும் உள்ளூர் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் உத்தர பிரதேச அணிக்காக ஆடி வரும் புவனேஸ்வர் குமார் விக்கெட் வேட்டையாடி வருகிறார். அதை விட முக்கியமான விஷயம் பந்தை அபாரமாக ஸ்விங் செய்யத் துவங்கி விட்டார். அதில் தான் அவருக்கு முன்பு சிக்கல் இருந்தது. அதை தற்போது சரி செய்து விட்டார்.
இந்த தொடரில் அவர் 7 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்கள் சாய்த்து இருக்கிறார். இவரது பந்துவீச்சு சராசரி 9.31 ஆகும். இவர் ஓவருக்கு 5.84 மட்டுமே கொடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இது நல்ல ரெக்கார்டு தான்.
சையது முஷ்டாக் அலி தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். அதே சமயம் இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பந்துவீச்சாளர்களில் குறைந்த சராசரி மற்றும் குறைந்த எகானமி வைத்துள்ளவர்களில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

அந்த டி20 தொடரில் பிற மாநில வீரர்கள் புவனேஸ்வர் குமார் வீசும் ஸ்விங் பந்தை ஆட முடியாமல் திணறி வருகிறார்கள். இந்த நிலையில் தான் உலகக்கோப்பை முடிந்த உடன் நடைபெற உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியில் சில ஆண்டுகள் முன்பு வரை பும்ரா, முகமது ஷமிக்கு இணையான வேகப் பந்துவீச்சாளராக இருந்தார் புவனேஸ்வர் குமார். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இருவரையும் விட பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவராக இருந்தார். இடையே அவரது ஃபார்ம் சரிந்தது. காயங்களும் ஏற்பட்டன.
அந்த இடைவெளியில் தான் முகமது சிராஜ் அணியில் தன் இடத்தை உறுதி செய்து கொண்டார். தற்போது உலகக்கோப்பை தொடரில் பும்ரா, ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் முழு வீச்சில் அனைத்து போட்டிகளிலும் ஆடி வருகிறார்கள். அடுத்து நடக்க உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்.
அப்போது இந்திய அணியில் இளம் வீரர்கள் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆட வைக்கப்பட உள்ளது. ஆஸ்திரேலிய அணியும் உலகக்கோப்பையில் ஆடும் வீரர்களை விடுத்தது இரண்டாம் கட்ட அணியை தேர்வு செய்ய உள்ளது. ஆனால், அந்த அணி வாய்ப்பின்றி இருக்கும் அனுபவ வீரர்களை அணியில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் இளம் பந்துவீச்சாளர்களால் அந்த அனுபவ ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியாது. அதை கருத்தில் கொண்டு, தற்போது ஃபார்முக்கு திரும்பி இருக்கும் புவனேஸ்வர் குமாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த கடைசி வாய்ப்பில் அவர் சரியாக செயல்பட்டு விக்கெட் வேட்டை நடத்தினால், அவருக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்.