புனே : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தான் சதம் அடிக்க வேண்டும் என்பதற்காக சிங்கிள் ரன்களை ஓடாமல் இருந்தது தவறு என விளாசி இருக்கிறார் இந்திய டெஸ்ட் அணி வீரர் புஜாரா.
மற்ற முன்னாள் வீரர்கள் உட்பட யாருமே விராட் கோலியின் சதம் சுயநலமானது என கூறாத நிலையில், புஜாரா மிக தைரியமாக இதை பொதுவெளியில் கூறி இருக்கிறார். ஸ்ரீகாந்த், நாசிர் ஹுசைன் போன்ற முன்னாள் வீரர்கள் கூட விராட் கோலி சதம் அடிக்க காத்திருந்ததை ஆதரித்து பேசிய நிலையில் புஜாரா அதற்கு நேர்மாறாக தன் முன்னாள் கேப்டனை விமர்சனம் செய்து இருக்கிறார்.
இப்படி சொல்வதால் புஜாராவுக்கு அணியில் இடம் கிடைக்காமல் கூட போகலாம். ஆனால், அதை எல்லாம் யோசிக்காமல் தைரியமாக விமர்சனம் செய்து. அணியை காவு கொடுத்து உங்கள் மைல்கல் சாதனையை எட்ட வேண்டுமா? என அவர் நெத்தியடி கேள்வி கேட்டு திகைக்க வைத்துள்ளார். அதற்கு முன் கோலி என்ன செய்தார் என சுருக்கமாக பார்ப்போம்.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி 70 ரன்களுடன் களத்தில் இருந்தார். அப்போது அவர் சதம் அடிக்க முடிவு செய்தார். அதற்காக அடுத்த சில பந்துகளில் அவர் சிங்கிள் ரன் எடுக்கவில்லை. அதே போல ஓவரின் முடிவில் மட்டும் சிங்கிள் ரன் ஓடி அடுத்த ஓவரிலும் ஸ்ட்ரைக்கை தானே வைத்துக் கொண்டார்.

இந்தியாவின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் கோலி தன் சதத்துக்கு மூன்று ரன்கள் தேவை என்பதால் சிக்ஸ் அடிக்கும் வரை காத்திருந்து சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியையும், தன் சதத்தையும் உறுதி செய்தார்.
கோலி சதம் அடித்த பின் தான் உலகக்கோப்பையில் சதம் அடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது என்பதால் சதம் அடிக்க வேண்டும் என காத்திருந்து சதம் அடித்ததாக கூறினார். ஆனால், சிலர் சச்சினின் அதிக ஒருநாள் போட்டி சதம் அடித்த சாதனையை விரைவில் முறியடிக்க ஆசைப்படும் விராட் கோலி அதற்காகவே இந்த சதத்தை சுயநலமாக அடித்தார் என கூறுகின்றனர்.
அதே விஷயத்தை தான் புஜாராவும் மறைமுகமாக கூறி இருக்கிறார். "விராட் கோலி சதம் அடிக்க வேண்டும் என்பது எனக்கும் ஆசைதான். ஆனால், நீங்கள் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். உலகக்கோப்பை தொடரில் போட்டிகளை விரைவாக முடிக்கப் பார்க்க வேண்டும். நெட் ரன் ரேட் அடிப்படையில் நாம் முதலிடத்தில் இருக்க வேண்டும்." என்றார் புஜாரா.
மேலும், "ஒருவேளை நெட் ரன் ரேட்டிற்காக போராட வேண்டிய நிலை வந்தால் அப்போது நடந்த சம்பவங்களை திரும்பிப் பார்த்து 'அன்று விரைவாக ரன் அடித்து இருக்கலாம்" என்று சொல்ல விரும்ப மாட்டீர்கள்," என்று புஜாரா கூறினார்.
மேலும், "நீங்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்று நான் உணர்கிறேன். நீங்கள் அணியைப் தான் முதலில் பார்க்க வேண்டும். நீங்கள் அணிக்கு தான் முதலிடம் கொடுக்க வேண்டும். அதுதான் எனது கருத்து. அணியை காவு கொடுத்து உங்கள் மைல்கல் சாதனையை செய்யக் கூடாது. ஆனால் சில வீரர்கள் சதம் அடித்தால், அடுத்த ஆட்டத்தில் அது அவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறார்கள். எனவே அது உங்கள் மனநிலையைப் பொறுத்தது," என்று புஜாரா கூறினார்.
புஜாரா கடைசியாக நடந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. எனினும், அவர் அணியில் இடம்பெற முயற்சித்து வருகிறார். இந்த நிலையில், இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலியை விமர்சனம் செய்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.