காபூல் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, 2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்கள் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

அதே சமயம், தாலிபான் குழுவில் சிலர் இந்த கொண்டாட்டத்தை எதிர்ப்பதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான உலகக்கோப்பை போட்டி சென்னையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 282 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில் இலக்கை எட்டியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் நாடுகள் இடையே பல காலமாக பிரச்சனைகள் உள்ளன. அதே சமயம் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாலிபான் அமைப்பில் ஒரு பிரிவினர் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவாகவும், பலர் எதிர்ப்பாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டுக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தான் நாட்டில் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சாலைகளில் தாலிபான் அமைப்பினர் துப்பாக்கி குண்டுகளை வானில் வெடிக்கச் செய்தும், கிரிக்கெட் ரசிகர்கள் வான வேடிக்கைகள் நிகழ்த்தும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
அதே சமயம், சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஒன்றில், ஒரு இளம் வயது நபர் கொண்டாட்டங்களின் போது கையில் வைத்து வெடிக்கப்படும் பட்டாசு ஒன்றை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், அதை விரும்பாத ஒருவர் கையில் பிரம்பை வைத்து அந்த நபரை அடித்து தள்ளினார். அத்துடன் அந்த பட்டாசை பிடுங்கி கீழே எறிந்தார். பின் அந்த இளைஞரின் கன்னத்தில் பளார், பளார் என அறைந்து அவரை அங்கே இருந்து அனுப்பினார்.
அந்த இளைஞரை தாக்கிய நபர் பாகிஸ்தானுக்கு ஆதரவான தாலிபான் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் வெற்றி ஆப்கானிஸ்தான் நாட்டில் பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், சிலருக்கு பெரிய கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தவில்லை என்பது தெரிகிறது.