மும்பை : ரோஹித் சர்மா கேப்டனாக, மற்ற கேப்டன்களை போல அல்ல, சக வீரர்களிடம் இனிமையாக பேசுவார், அன்பாக நடந்து கொள்வார் என மும்பை முன்னாள் வீரர் அமோல் முசும்தார் கூறி இருக்கிறார்.
மற்ற கேப்டன்கள் என அமோல் முசும்தார் யாரை கூறுகிறார்? நிச்சயம் தோனி அல்ல. அவர் சக வீரர்கள் வந்து செல்ல எப்போதும் தன் அறையை திறந்து வைத்திருப்பார் என்று கூறுவார்கள்.
அப்படி என்றால் அது தோனிக்கு பின் கேப்டன் பதவியில் இருந்த விராட் கோலிதான். அவரைத் தான் பெயரை சொல்லாமல் அன்பாக பேச மாட்டார் என கூறி இருக்கிறார் முசும்தார்.

மும்பை அளவிலான போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்தவர் அமோல் முசும்தார். அவரது இளமைக் காலம் குறித்து அதிகம் அறிந்தவர். ரோஹித் சர்மாவின் மோசமான காலம் குறித்து பேசிய அவர், "ரோஹித் சர்மா 2011 உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம் பெறாமல் போன போது அவர் கடினமாக உழைத்து பின் அணியில் சேர்ந்தார்." என்றார்.
அடுத்து கேப்டனாக ரோஹித் சர்மா எவ்வாறு செயல்படுகிறார் என்பது பற்றி சொல்லும் போது, "அவரது கேப்டன்சி பாணி மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானது; அவர் தனது வீரர்களுடன் மிகவும் பணிவாகவும் மிகவும் அன்பாகவும் பேசுகிறார், அனைத்து விஷயங்களையும் மிக எளிதாகவும் எளிமையாகவும் வைத்திருப்பார்.:" என்றர் அன்மோல் முசும்தார்.
இந்த நிலையில், சில விராட் கோலி ரசிகர்கள், ரோஹித் சர்மாவின் நண்பரான அன்மோல் முசும்தார் வேண்டுமென்றே கோலியை சீண்டும் வகையில் இப்படி ஒரு கருத்தை கூறி இருக்கிறார் என கூறி வருகின்றனர்.
விராட் கோலி கேப்டனாக இருந்த போது அணியில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. உடற்தகுதி தேர்வில் இத்தனை மதிப்பெண் பெறவில்லை என்றால் அணியில் இடம் இல்லை என்றெல்லாம் அப்போது பரபரப்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
அதே போல, ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது ரோஹித் சர்மா அணி - கோலி அணி என வீரர்கள் இடையே விரிசல் இருந்ததாகவும் ஒரு வதந்தி சுற்றிக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது