மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வீரர் மார்கோ ஜான்சென் யாருமே எதிர்பாராத ஆட்டத்தை ஆடி மிரள வைத்தார்.
தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையே ஆன போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஹென்ஸ்ரிக்ஸ் 85, டஸ்ஸன் 60, எய்டன் மார்கிரம் 42 ரன்கள் குவித்தனர்.
அந்த அணி 36.3 ஓவரில் 5 விக்கெட்டை இழந்த போதே 243 ரன்கள் குவித்து இருந்தது. கடைசி 15 ஓவர்களில் எப்படியும் அந்த அணி 400 ரன்களை நோக்கி செல்லும் என்ற கணிக்கப்பட்டது.
ஆனால், கிளாசன் ஆட்டமிழந்தால், அதன் பின் எந்த அதிரடி வீரரும் இல்லை என்பதால் இங்கிலாந்து அணி நம்பிக்கையுடன் இருந்தது. கிளாசன் அதிரடி ஆட்டம் ஆடி 67 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார். 12 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். ஆனால், அவருக்கு ஈடு கொடுத்து ஆட வந்த மார்கோ ஜான்சென் முதலில் பூனைக்குட்டி போல ஒரு பந்துக்கு ஒரு ரன் என அடித்தார். அதுவரை அவர் சிக்ஸ் அடித்திருக்கவில்லை.

ஆனால், 46வது ஓவரில் தன் உண்மை முகத்தை காட்டினார் ஜான்சென். அந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் பின் 48வது ஓவரில் இரண்டு சிக்ஸ், 49அது ஓவரில் மூன்று சிக்ஸ் அடிக்க இங்கிலாந்து அணி மிரண்டு போனது. கிளாசன் ரன் குவிப்பை தடுப்பதில் தீவிரமாக இருந்த இங்கிலாந்து, ஜான்செனின் இந்த அவதாரத்தை எதிர்பார்க்கவில்லை.
தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் முடிவில் ஜான்சென் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து இருந்தார். கிளாசனை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஜான்சென் ரன் குவித்து இருந்தது தான் இதில் உச்சகட்டம்.
தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 399 ரன்கள் குவித்தது. ஜான்சென் தன் அதிரடியை காட்டி இருக்காவிட்டால் தென்னாப்பிரிக்கா 375 ரன்களை எடுத்திருக்கவே வாய்ப்பு இருந்தது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் ஜான்சென். இங்கிலாந்து அணி ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்து இருந்த நிலையில், இந்தப் போட்டியிலும் சொதப்பியது.