புனே : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இம்முறை இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று அனைவருமே எதிர்பார்த்த ஒரு அணி என்றால் அது இங்கிலாந்து தான்.
ஆனால் எங்களுக்கும் இந்த தொடருக்கும் சம்பந்தமே இல்லை. நாங்கள் தண்ணீர் கேன் போட வந்தவங்க ப்ரோ என்பது போல் விளையாடி அனைவரின் ஏமாற்றத்தையும் பெற்றது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணி எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டும் தான் இந்த தொடரில் வென்றிருக்கிறது. இதற்கு எல்லாம் டாஸ் தான் காரணம் என்று கூறி எஸ்கேப்பாக நினைத்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர். நெதர்லாந்து அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு பேசிய பட்லர் இந்த ஒரு வெற்றிக்காக நாங்கள் மிகவும் காத்துக் கொண்டிருந்தோம்.
இது எங்களுக்கு தேவைப்பட்ட ஒன்று. இன்றைய ஆட்டத்தில் டேவிட் மாலன், எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தார். எனினும் நடுவரிசையில் கொஞ்சம் சொதப்பினோம். இருந்தாலும் கிறிஸ் வொக்ஸ் மற்றும் பட்லர் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் கொடுத்தார்கள். போட்டியில் எந்த நேரத்திலும் யாரேனும் ஒருவராவது பொறுப்பை உணர்ந்து ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம்.
அதனை இன்று பென் ஸ்டோக்ஸ் செய்திருக்கிறார். இது போன்ற சூழலில் சிறப்பாக விளையாடக்கூடிய ஸ்டோக்ஸ் அணியில் இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறது இன்று வொக்ஸ், ஸ்டோக்ஸ் இருவருமே அறிவுப்பூர்வமாக விளையாடினார்கள். இந்த தொடரில் நாங்கள் நன்றாக விளையாடவில்லை. எனினும் இந்த தொடரில் டாஸ் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

ஒருவேளை உலக கோப்பையில் ஆடுகிறோம் என்ற நெருக்கடியால் நாங்கள் சரியாக விளையாடவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் விளையாடி ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றோம். ஆனால் இந்த தொடரில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தவர்கள் கூட இதனை சரியாக செய்யவில்லை. கொல்கத்தாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் நடைபெற இருக்கிறது.அந்த போட்டியில் நாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு ஏமாற்றமான தொடருக்கு இறுதியில் இதுபோல் வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பட்லர் கூறியுள்ளார்.