கொல்கத்தா : 2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக ஆடி தொடரில் இருந்தே வெளியேறி இருக்கும் நிலையில் அந்த அணி என்ன தவறுகள் செய்தது என பட்டியல் போட்டு விளாசி இருக்கிறார்கள் விமர்சகர்கள்.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரில் ஒன்பது போட்டிகளில் நான்கு வெற்றிகள் மட்டுமே பெற்று அரை இறுதி வாய்ப்பை இழந்து இருக்கிறது.
பாகிஸ்தான் அணி செய்த முதல் தவறே அணித் தேர்வில் அந்த அணி செய்த சொதப்பல் தான். அதன் பின் பெரிய அரசியலும் உள்ளது. அது மட்டுமின்றி இருக்கும் வீரர்களை திறம்பட பயன்படுத்தாமல் சொதப்பினார் கேப்டன் பாபர் அசாம். மேலும், மற்ற அணிகளுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தான் அணி பழைய பாணியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தது. இப்படி விமர்சகர்கள் பல்வேறு தளங்களில் பாகிஸ்தான் அணி குறித்து கூறிய விமர்சனங்கள் இங்கே -

பாகிஸ்தான் அணியின் உலகக்கோப்பை அணித் தேர்விலும், அதன்பின் ஒவ்வொரு போட்டியின் போதும் யாரை ஆட வைப்பது என்பதில் அந்த அணியில் குழப்பம் நீடித்தது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம், அதிரடி துவக்க வீரர் ஃபாக்கர் ஜமானை நீக்கி விட்டு, தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் தன் உறவினரான இமாம் உல் - ஹக்கை துவக்க வீரராக களமிறக்கினார். அதனாலேயே முதல் சில போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. ஜமான் மீண்டும் அணிக்கு திரும்பிய உடனேயே பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றிகளை பெற்றது.
பாகிஸ்தான் அணி சிறிய மற்றும் பலவீனமான அணிகளான நெதர்லாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளையே வீழ்த்தி இருந்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜமான் ஆடிய ஆட்டத்தால் வென்றது. மற்றபடி, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பலமான அணிகளை கண்ட உடன் பயத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
2023 உலகக்கோப்பை தொடரில் பெரும் வெற்றிகளை குவித்த அணிகளில் இருந்து கத்துக்குட்டி அணிகள் வரை சுழற் பந்துவீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தி இருந்தது. குறிப்பிட்ட பிட்ச்களில் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து மற்ற அணிகள் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அணி ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத சோகத்தில் இருந்தது. இதற்கு அணித் தேர்வு ஒரு முக்கிய காரணம். மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.
அது போல பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு சில பேட்ஸ்மேனைகளை நம்பியே இருக்கும் 90களின் கிரிக்கெட் பாணியை இன்னும் கடைபிடித்து ஆடி வருகிறது. துவக்க வீரர்கள் இருவரும் நிலைத்து நின்று நீண்ட நேரம் ஆடுவதே இல்லை. அதனால், சிறந்த பேட்ஸ்மேன் ஆன பாபர் அசாம் முதல் 10 ஓவர்களிலேயே களத்துக்கு வர வேண்டிய நிலை உள்ளது. அவர் ஆட்டமிழந்து சென்றால், முகமது ரிஸ்வானை தவிர பாகிஸ்தான் அணியில் வேறு எந்த வீரரும் பேட்டிங்கை தாங்கிப் பிடிப்பதில்லை.
பாகிஸ்தான் நாட்டு அரசியலில் பல குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், அங்கே பிரதமர் மற்றும் பிற முக்கிய அரசியல் தலைமையில் மாற்றம் நடந்தால் அது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிலும் எதிரொலிக்கத் துவங்கியது. அதன் காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டது. அது அணியிலும் எதிரொலித்தது. கேப்டன் பாபர் அசாம், சில முக்கிய வீரர்கள், பயிற்சியாளர் குழுவை தவிர பல வீரர்கள் இந்த நிர்வாக மாற்றத்தால் மறைமுகமாக அணியில் தங்கள் வாய்ப்பை இழந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த சூழ்நிலை இருந்தாலும் அதை எல்லாம் சமாளித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டியவர் கேப்டன் தான். ஆனால், அவரோ அரை இறுதிக்கு போக கடும் முயற்சி எடுக்க வேண்டிய இங்கிலாந்து போட்டிக்கு முன் ஷாப்பிங் சென்று இருக்கிறார். களத்துக்கு வெளியே எப்படி வேண்டுமானாலும் அவர் இருந்து கொள்ளட்டும், ஆனால் போட்டியின் போது கூட அவர் தன் சக வீரர்களிடம் முகம் கொடுத்து பேசி அவர்களை உற்சாகப்படுத்துவதில்லை. அணித் தேர்வில் பிடிவாதமாக இருந்து சிறந்த வீரர்களை கேட்டுப் பெறுவதில்லை. பீல்டிங் நிற்க வைப்பது, பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்துவது என பல விஷயங்களிலும் கோட்டை விட்டார் பாபர் அசாம்.