சென்னை : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முன்னாள் வீரர்களால் கட்டம் கட்டப்பட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் மோசமான செயல்பாடுகளால் சிக்கலில் இருக்கும் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பதவி நீக்கம் குறித்தும், பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் குறித்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் ஆகியோரிடம் கருத்து கேட்க உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதலில் நெதர்லாந்து, இலங்கை என பலம் குறைந்த இரண்டு அணிகளை வீழ்த்தி தெம்பாக இருந்தது. ஆனால், அடுத்து இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பையே இழக்கும் நிலையில் இருக்கிறது பாகிஸ்தான்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் களத்தில் எடுத்த முடிவுகள், அணித் தேர்வு என பலவும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அது மட்டுமின்றி, அணியில் பாபர் அசாம் மற்றும் பிற முன்னணி வீரர்கள் இடையே பிளவு இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாபர் அசாம் நல்ல பேட்ஸ்மேன், ஆனால் நல்ல கேப்டன் அல்ல. அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி உள்ளனர்.

பாபர் அசாம் கடந்த நான்கு ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். உலகின் முன்னணி பேட்ஸ்மேன் ஆன அவர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஆன போது, இனி பாகிஸ்தான் கிரிக்கெட் எங்கேயோ போகப் போகிறது என இதே முன்னாள் வீரர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். ஆனால், பாபர் அசாம் எந்த பெரிய தொடரையும் வென்று கொடுக்கவில்லை.
உலகக்கோப்பை தொடருக்கு முன் நடந்த ஆசிய கோப்பை தொடரின் போது அவருக்கும், பாகிஸ்தான் அணிக்கும் கொடுக்கப்பட்ட "பில்டப்" கொஞ்ச நஞ்சமல்ல. அந்த அளவுக்கு பாகிஸ்தான் அணியை பெரிதாக காட்டி ஊதிக் கொண்டே போனார்கள். ஆனால், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த உடன் எல்லாமே தலைகீழாக மாறியது. அதைத் தொடர்ந்து இலங்கை அணியிடமும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
அடுத்து 2023 உலகக்கோப்பை தொடருக்கு வந்த பாகிஸ்தான் அணி இதிலும் இந்திய அணியை வெல்லும் வரை நல்ல அணியாக பாராட்டுகளைப் பெற்று வந்தது. ஆனால், இந்திய அணியிடம் தோற்ற உடன் கடும் எதிர்வினைகளை சந்தித்தது. அதன் பின் நம்பிக்கை இழந்த அணி போல, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடமும் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இந்த நிலையில், மொத்த விமர்சனமும் பாபர் அசாம் மீது திரும்பி இருக்கிறது.
குறிப்பாக, உலகக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வின் போது முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் பதவிகளில் இருக்கும் மிஸ்பா உல் ஹக், இன்சமாம் உல் ஹக் கூறிய வீரர்களை தேர்வு செய்ய பாபர் ஒப்புக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பாபர் அசாம் தான் இந்த தோல்விக்கு பொறுப்பு என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜாகா அஷ்ரப் பாகிஸ்தான் அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க முன்னாள் வீரர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே, இன்சமாம் உல் ஹக், முகமது யூசுப் மற்றும் ஆகிப் ஜாவேத் ஆகியோரை சந்தித்தார். அவர்களை தொடர்ந்து வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், சக்லைன் முஷ்டாக், உமர் குல் ஆகியோரை சந்திக்க முடிவு செய்துள்ளார். இதில் குறிப்பாக முன்னாள் கேப்டன்களாக செயல்பட்ட ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிகிறது. அவர்கள் இருவருமே பாபர் அசாமை கடுமையாக விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் பலர் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கூறுவார்கள் என கூறப்படுகிறது. வாசிம் அக்ரம், வக்கார் யூனிசும் பாபர் அசாமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கக் கோரினால் உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் பாபர் அசாம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.