அகமதாபாத் : பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியை, இந்தியாவின் பும்ராவுடன் ஒப்பிடவே முடியாது எனக் கூறி அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார் கவுதம் கம்பீர்.
பும்ரா 2023 உலகக்கோப்பை தொடரில் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வேகப் பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்த கடினமான சூழ்நிலையில் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி அதை ஷஹீன் அப்ரிடி மட்டுமல்ல வேறு எந்த பவுலரும் செய்ய முடியாது என கம்பீர் கூறி இருக்கிறார்.

சமீப காலமாக சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்த விவாதம் கிரிக்கெட்டில் வலம் வருகிறது. அதில் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி - இந்திய அணியின் பும்ரா குறித்த ஒப்பீடுகள் அதிகம். அப்ரிடி மிக அதிக வேகத்தில் பந்தை வீசுவார். ஆனால், பந்து வீசும் டெக்னிக்கில் பும்ரா தான் கில்லாடி.
ஷஹீன் அப்ரிடி புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவார். அதே போல, பழைய பந்தில் ஸ்விங் செய்து விக்கெட் வீழ்த்துவார். ஆனால், பும்ரா எந்த சமயத்திலும் தனது யார்க்கர்களால் எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார். அவர்களால் ஆட முடியாத பந்துகளை வீசுவார். அதிலேயே தடுமாறி அவர்கள் விக்கெட்டை இழந்து விடுவார்கள். இந்த ஒப்பீடுகளை தான் கவுதம் கம்பீர் செய்துள்ளார்.
"பும்ரா சென்னை பிட்ச்சில் மிட்செல் மார்ஷை வெளியேற்றிய விதம் (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில்), ஆப்கானிஸ்தான் போட்டியில் இப்ராஹிம் சத்ரானை அவர் அவுட்டாக்கிய விதம், மூலமாக உலக கிரிக்கெட்டில் ஒரு முழுமையான, மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என பும்ரா காட்டி இருக்கிறார்." என்றார் கவுதம் கம்பீர்.
மேலும், "ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷஹீன் ஷா அப்ரிடி ஆகியோரை நாம் முன்பு ஒப்பிட்டுப் பார்த்தோம், ஆனால், அதில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. பும்ரா போல போட்டியின் எந்த கட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளரைச் சொல்லுங்கள் பார்ப்போம். பந்துவீச்சாளர்கள் புதிய பந்தில் அல்லது கடைசி ஓவர்களின் போது நன்றாகப் பந்து வீசுவார்கள், ஆனால் பும்ரா புதிய பந்து அல்லது பழைய பந்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்," எனக் கூறி இருக்கிறார் கம்பீர்.