மும்பை : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு தொடரில் எந்த வீரர்கள் மோசமாக விளையாடி வருகிறார்கள் என்பதை தேர்வு செய்து பிளேயிங் லெவன் என்ற அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
இதில் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கி சிறப்பாக செயல்படாத பல வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நடப்பு உலக சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து சேர்ந்த ஐந்து வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். உலகின் அதிபயங்கர தொடக்க வீரர் என்று அறியப்பட்ட பாரிஸ்டோ இந்த தொடரில் மோசமாக விளையாடிருக்கிறார். இதனால் இந்த பிளேயிங் லெவனில் அவர் தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார். இதைப் போன்று வங்கதேசத்தை சேர்ந்த டான்சித் ஹசன் மிகப்பெரிய வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
இதே போன்று தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா இந்த பட்டியலில் மூன்றாவது வீரராக களம் இறங்கியுள்ளார். உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஜோ ரூட் இந்த தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. இதனால் நம்பர் நான்காவது வீரராக அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து அணியின் கேப்டனும் அதிரடி நாயகனுமான பட்லர் இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் நடு வரிசையில் ஐந்தாவது வீரராக தேர்வு செய்வது மட்டும் அல்லாமல் இந்த மோசமான அணியின் கேப்டனாக களமிறங்கி உள்ளார்.
இதேபோன்று ஆறாவது வரிசையில் இங்கிலாந்து அணியின் அதிரடி நாயகம் லிவிங்ஸ்டோனும் ஏழாவது வரிசையில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதைப் போன்று பாகிஸ்தான் வீரர் முகமது நவாஸ் இந்த அணியில் எட்டாவது வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஒன்பதாவது வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஜிபுர் ரஹ்மானும், பத்தாவது வீரராக இலங்கை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் தீக்சனாவும் இடம் பிடித்திருக்கிறார்கள். 11-வது வீரராக இங்கிலாந்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பட்டியல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.