டெல்லி : இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்திய நிலையில், முஜீப் உர் ரஹ்மான் தான் கேப்டனுடன் போட்ட திட்டம் ஒன்றை பற்றி வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் இடையே ஆனா உலகக்கோப்பை லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி ஆடுகளத்தில் சேஸிங் செய்யும் அணியே வெற்றி பெறும் என்பதால் அந்த முடிவை எடுத்த இங்கிலாந்து அணி இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்கள் குவித்தது. பேட்டிங்கில் தங்கள் பணியை சரியாக செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு பந்துவீச்சில் பெரும் சவால் காத்திருந்தது.
காரணம், டெல்லியில் இரவு நேரத்தில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் பந்து வீசும் அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். முதல் பாதியில் வேலை செய்த ஸ்பின் பந்துவீச்சு, இரண்டாம் பாதியில் வேலை செய்வது கடினம்.
ஆனால், இந்த பிரச்சனையை முறியடிக்க முடிவு செய்த முஜீப் உர் ரஹ்மான், தான் பவர்பிளேவில் பந்து வீசப் போகிறேன் என ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்ததுல்லாவிடம் கூறி இருக்கிறார். ஸ்பின் பந்துவீச்சாளர் பவர்பிளேவில் பந்து வீசுவது பெரிய ரிஸ்க். அந்த ஓவர்களில் பவுண்டரி எல்லை அருகே இரண்டு பீல்டர் மட்டுமே நிற்க முடியும். எனவே, பவர்பிளேவில் ஸ்பின் பந்துகளை பேட்ஸ்மேன் அடித்து ஆட நிறைய வாய்ப்புகள் உள்ளது.
ஆனால், முஜீப் உர் ரஹ்மான் வலைப்பயிற்சியின் போது புதிய பந்தில் எப்படி பந்து வீசுவது என பயிற்சி செய்து தன்னை தயார்படுத்திக் கொண்டார். பின் கேப்டனிடம் தன் திட்டத்தை கூறி இருவரும் இதற்கு ஏற்றவாறு தங்களை மனதளவில் தயார் செய்து கொண்டனர்.
ஆப்கானிஸ்தான் 284 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து சேஸிங் ஆடத் துவங்கிய போது முதல் ஓவரை முஜீப் உர் ரஹ்மான் வீசினார். அவர் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து அணியால் அவர் பந்துகளை அடித்து ஆட முடியவில்லை. மாறாக முஜீப் உடன் அந்த ஸ்பெல்லில் பந்து வீசிய வேகப் பந்துவீச்சாளர் பரூக்கி ஓவர்களில் அடித்து ஆடியது இங்கிலாந்து.
ஆனாலும், முஜீப் உர் ரஹ்மான் விடாப்பிடியாக ஒரே ஸ்பெல்லில் 7 ஓவர்கள் வரை வீசினார். ஸ்பின் பந்துகளை பெரிதாக ஆட முடியாத அழுத்தத்தில் இருந்த இங்கிலாந்து அணி, முதல் 13 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்தது.
பின் முஜீப் உர் ரஹ்மான் ஆட்டத்தின் பிற்பகுதியில் மீதமிருந்த மூன்று ஓவர்களை வீசினார். அவர் 10 ஓவர்கள் வீசி 3 விக்கெட்களை எடுத்தார். ஆட்டநாயகன் விருதை பெற்ற அவர் அப்போது இந்த திட்டத்தை பற்றி கூறினார்.
"ஒரு சுழற்பந்து வீச்சாளராக, பவர்பிளேயில் பந்துவீசுவது மிகவும் கடினம். வட்டத்துக்கு வெளியே இரண்டு பீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள். அதற்காக நான் வலைப் பயிற்சியில் ஈடுபட்டேன். புதிய பந்தில் பந்துவீசுவது மற்றும் முடிந்தவரை சீரான பந்து வீச்சை தொடர முயற்சிப்பது ஆகியவற்றை செய்தேன். அதுதான் என்னை மிகவும் திறம்பட மாற்றியது. நான் எப்பொழுதும் ஸ்டம்ற்கு ஸ்டம்ப் பந்துவீசி எளிமையாக இருக்கவே முயற்சிப்பேன். ஆட்டத்தின் பிற்பகுதியில் பனி வரப் போகிறது என்பதை அறிந்து, பவர்பிளேயில் என்னை பந்துவீச வைக்குமாறு கேப்டனிடம் சொல்லி இருந்தேன். நாங்கள் மனதளவில் இதற்கு தயாராக இருந்தோம்." என்றார் முஜீப் உர் ரஹ்மான்.