மும்பை : இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை பெற்றாலும், இந்திய வீரர்கள் செய்யும் முக்கிய தவறு ஒன்றை சுட்டிக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் ஹீலி.
2023 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி நான்கு போட்டிகளில் ஆடி நான்கிலும் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் என நான்கு வெவ்வேறு விதமான பலம் கொண்ட அணிகளை இந்தியா வீழ்த்தி இருக்கிறது.
இந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடியது. எந்த அளவிற்கு என்றால் ஒரு சிங்கிள் ரன்னை தடுத்தால் கூட அணியில் ஒவ்வொருவரும் அந்த வீரரை பாராட்டினார்கள். இந்த நடைமுறை முக்கியமான போட்டிகளின் போது அணிக்கு பெருமளவில் உதவி செய்யும்.
ஆனால், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு எதிராக ஆடும் போதும் இந்தியா ஆக்ரோஷமாக செயல்படுவது ஒருவித அயர்ச்சியை ஏற்படுத்தி விடும். உலகக்கோப்பை நீண்ட தொடர். அதில் இன்னும் ஐந்து லீக் போட்டிகளில் இந்தியா ஆட வேண்டும்.

அந்த ஐந்து போட்டிகளில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பலமான அணிகளை சந்திக்க வேண்டும். அதன் பின், அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றால் அந்தப் போட்டிகளிலும் ஆட வேண்டும்.
இது பற்றி குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் இயான் ஹீலி, தொடரின் முற்பகுதியிலேயே எல்லை மீறி அணியின் அதிகபட்ச ஆற்றலை வெளிப்படுத்தி விட்டால், பிற்பகுதியில் முக்கியமான போட்டிகளின் போது இந்திய அணி சோர்ந்து போய் விட வாய்ப்பு உள்ளது எனக் கூறி இருக்கிறார்.
இது பற்றி இயான் ஹீலி பேசுகையில், "இந்தியாவின் வெற்றிகளில் அவர்கள் எத்தனை ஆற்றலை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பார்த்தால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு வீழ்ந்து விடுவார்களோ என எனக்கு பயமாக உள்ளது. அவர்கள் அதிக ஆற்றலை கொடுக்கிறார்கள். அவர்கள் அதிகப்படியாக அதை செய்கிறார்கள். அவர்களின் ஆக்ரோஷம், களத்தில் ஒருவர் மோசமான பந்தை வீசும் போது வெளிக்காட்டும் உடல்மொழி, சிறப்பாக பீல்டிங் செய்தால் அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சி என எல்லாமே அதிகப்படியாக உள்ளது. அவர்களிடம் நல்ல அணி உள்ளது. ஆனால், அவர்கள் அதிகப்படியாக இதை செய்கிறார்களோ என எனக்கு பயமாகவும் உள்ளது." என்றார்.
"என்னுடைய கவலை எல்லாம் அவர்கள் அடுத்த ஆறு போட்டிகளில் விளையாடி அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். அவர்கள் வங்கதேசம் போன்ற அணிகளை அப்போது சந்திக்கப் போவதில்லை. அப்போது அவர்களுக்கு அனைத்து ஆக்ரோஷமும் தேவைப்படும். எனவே, இப்போதே அதை வீணாக்காமல் இருக்க வேண்டும்" என்றார் இயான் ஹீலி. வேறு யாரும் சொல்லாத முக்கிய கருத்தை கூறி இருக்கிறார் இயான் ஹீலி. அவர் சொல்வது முக்கியமான கருத்தாகவே உள்ளது.