புனே : வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைக்காது என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
வங்கதேச அணி எப்படி பந்துவீச்சை எதிர்கொள்ளும் என்பதை வைத்தே இந்த முடிவை கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், புனேவில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் ஸ்பின்னரான அஸ்வின் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. அதே சமயம், வங்கதேச அணி வேகப் பந்துவீச்சில் தடுமாறும் என்பதால் நிச்சயம் இந்திய அணி மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்யும். மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக ஷர்துல் தாக்குர் இருப்பார்.

புனே ஆடுகளம் கடந்த காலங்களில் அதிக ரன் குவிக்கும் ஒரு ஆடுகளமாகவே அறியப்பட்டுள்ளது. அந்த ஆடுகளத்தில் வங்கதேச அணிக்கு ஏற்ற ஸ்பின் பவுலர்களை அதிகம் பயன்படுத்தினால் அது அந்த அணி எளிதாக ரன் குவிக்க வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி புனே ஆடுகளத்தின் பவுண்டரி எல்லை மிகவும் சிறியது. எளிதாக சிக்ஸ், ஃபோர் அடிக்கலாம். எனவே, ஸ்பின்னர்களை வங்கதேச வீரர்கள் அடித்து ஆட முடிவு செய்தால் அது இந்திய அணிக்கு சிக்கலாக மாறி விடும்.
எனவே, குல்தீப் யாதவ், ரவிந்திர ஜடேஜா, பும்ரா, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் ஆகிய ஐந்து பந்துவீச்சாளர்களும், ஆறாவதாக ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் அணியில் இடம் பெற்று பந்துவீசுவார்கள்.
வலது கை ஸ்பின்னர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது. இத்தனைக்கும் வங்கதேச அணியில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் ஆட உள்ளனர். ஆனாலும், அஸ்வினை பயன்படுத்த வேண்டாம் என்ற முடிவில் தான் இருக்கிறார் ரோஹித் சர்மா. அதற்கு பிட்ச் தான் முக்கிய காரணம்.
இந்தியாவின் உத்தேச பிளேயிங் 11 : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்