புனே : வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
கடுமையான வலியால் துடித்த அவர் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார்.
அங்கே அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்த பின், அவர் காயத்தின் நிலையை பொறுத்தே அவர் மைதானம் திரும்புவாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பும்ரா, சிராஜ் ஓவர்களை வீசிய பின் வழக்கம் போல பாண்டியாவிற்கு ஓவர் கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா.
பாண்டியா மூன்று பந்துகளை வீசினார். அதில் இரண்டு ஃபோர் கொடுத்து இருந்தார். மூன்றாவது பந்தை வீசிய பின் அவர் பந்தை தடுக்க ஓடி வந்த போது கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக பாதியிலேயே நின்று, கீழே அமர்ந்து விட்டார்.

பின் இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு முதலுதவி செய்தார். அதன் பின் பாண்டியா ஓட முயற்சி செய்து பார்த்தார். ஆனால், அவருக்கு வலி அதிகமாக இருந்தது. இதை அடுத்து அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர், போட்டிக்கு நடுவே ஹர்திக் பாண்டியா நிலை குறித்து பிசிசிஐ அவசர அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஹர்திக் பாண்டியா ஸ்கேன் எடுக்க சென்று இருப்பதாக கூறி இருக்கிறது. இதனிடையே ஹர்திக் பாண்டியா மைதானத்தை விட்டு வெளியே சென்றதால் அவர் இந்தப் போட்டியில் மீண்டும் பந்து வீச முடியாது.
அவர் மீண்டும் மைதானம் திரும்பினால் பேட்டிங் செய்யலாம். ஆனால், அதற்கும் சில விதிகள் உள்ளன. இந்தியா பேட்டிங் ஆடத் துவங்கி 120 நிமிடங்கள் ஆகி இருக்க வேண்டும் அல்லது இந்தியா 5 விக்கெட்களை இழந்து இருக்க வேண்டும்.
ஒருவேளை இந்தியா சேஸிங் செய்யும் போது விரைவாக விக்கெட்களை இழந்தால் பாண்டியா 5 விக்கெட்கள் விழுந்த பின்னரே களமிறங்க முடியும். அப்படி ஒரு சிக்கல் இப்போது ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, ஹர்திக் பாண்டியாவால் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர் காயம் மோசமானதாக இருந்தால் இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரில் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும். பாண்டியாவுக்கு மாற்றாக அணியில் எந்த வீரரும் இல்லை என்பதே அதற்கு காரணம்.