சென்னை : 2023 உலகக்கோப்பை தொடரில் 16 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டு அணிகள் மட்டுமே இன்னும் தோல்வியே சந்திக்காமல் உள்ளது.
அந்த இரண்டு அணிகள் நியூசிலாந்து மற்றும் இந்தியா தான். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தன் நான்காவது போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அந்த அணியின் நான்காவது வெற்றி ஆகும்.

நியூசிலாந்து அணி தான் ஆடிய நான்கு போட்டிகளிலும், வெற்றி பெற்று மொத்தம் 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டிக்கு முன்னதாக மூன்று போட்டிகளில் ஆடி மூன்றிலும் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி 6 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தில் இருந்தது.
நியூசிலாந்து அணி நான்காவது போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியின் முதல் இடத்தை தட்டிப் பறித்துள்ளது. இந்திய அணி அடுத்து வியாழன் அன்று வங்கதேச அணிக்கு எதிராக ஆட உள்ளது. அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கூடுதல் நெட் ரன் ரேட் பெற்றால் மீண்டும் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்க முடியும். லீக் சிற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து, இந்தியா தவிர மற்ற எட்டு அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வி அடைந்துள்ளன. தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகள் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. அந்த அணிகள் புள்ளிப் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன. இங்கிலாந்து, வங்கதேசம், ஆஸ்திரேலியா, மற்றும் நெதர்லாந்து அணிகள் மூன்று போட்டிகளில் ஆடி அதில் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளன.
ஆப்கானிஸ்தான் அணி நான்கு போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் மட்டுமே வென்று, மூன்று போட்டியில் தோல்வி அடைந்து ஒன்பதாம் இடத்தில் உள்ளது. இலங்கை அணி தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடமான பத்தாவது இடத்தில் உள்ளது.