கோலிக்கு எதிராக வங்கதேசம் செய்த அவச்செயல்.. விதியை மீறி அம்பயர் எடுத்த முடிவு.. அதிரடி சம்பவம்
புனே : இந்தியா - வங்கதேசம் இடையே ஆன போட்டியில் இந்தியா வெற்றிக்கு அருகே சென்ற போது வங்கதேச வீரர் நசும் அஹ்மத் ஒரு அவச்செயலை செய்தார்.
விராட் கோலி சதத்தை நெருங்கிய நிலையில், அதற்கு எதிராக வேண்டுமென்றே வைடு பந்தை வீசினார். அதைக் கண்ட ரசிகர்கள் இது தவறான செயல் என நினைத்த போது, அம்பயர் அதற்கும் மேல் சென்று வைடு தர மறுத்தார்.
இந்த இரண்டு சம்பவமும் கிரிக்கெட்டுக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என முன்னாள் வீரர்கள், விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்தப் போட்டியில், இந்திய அணி வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்கள் வெற்றி இலக்கை 41.3 ஓவர்களில் எட்டியது. கடைசி சில ஓவர்களில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவை என்ற நிலையில், விராட் கோலி சதம் அடிக்க முடிவு செய்தார். அவர் அப்போது 70 ரன்கள் எடுத்து இருந்தார்.

அடுத்த நான்கு ஓவர்களையும் தானே ஆட முடிவு செய்து, ராகுலுக்கு ஸ்ட்ரைக் தராமல் ஓவரின் முடிவில் சிங்கிள் ரன் ஓடி அடுத்த ஓவரையும் தானே எடுத்துக் கொண்டு ஆடினார். கோலியின் இந்த செயல் சரியா? தவறா? என சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது.
ஆனால், போட்டியில் கோலி இதை செய்த போது வங்கதேச வீரர்கள் இதை தடுக்க நினைத்தனர். 41வது ஓவரின் இரண்டாவது பந்து பவுன்சர் ஆகி, வைடு என அறிவிக்கப்பட்டது. அடுத்து வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், நசும் அஹ்மத் 42வது ஓவரின் முதல் பந்தை வேண்டுமென்றே வைடாக செல்லுமாறு வீசினார். அப்படி செய்தால் இந்தியா வெற்றிக்கு அருகே செல்லும். கோலி சதம் அடிக்கும் முன்பே இந்திய அணியை வெற்றி பெற வைக்க வங்கதேசம் செய்த அவச்செயல்தான் இது.
அப்போது களத்தில் இருந்த அம்பயர் அதற்கு விதிப்படி வைடு கொடுத்து இருக்க வேண்டும். ஆனால், அவர் கோலிக்கு சாதகமாக செயல்பட்டு வைடு கொடுக்காமல் நின்றார். அதைக் கண்டு அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் பின் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி சிக்ஸ் அடித்து தன் சதம் மற்றும் அணியின் வெற்றி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து முடித்தார்.
இந்த சம்பவத்தில் வங்கதேசம் செய்தது நிச்சயம் அவச்செயல்தான். விளையாட்டு என்றால் நேர்மையாக விளையாட வேண்டும். அடுத்த அணி பேட்ஸ்மேன் சாதனையை தடுப்பது இந்த விளையாட்டின் நோக்கம் அல்ல. அவரது விக்கெட்டை வீழ்த்தி நீங்கள் அதை செய்யலாம். ஆனால், வைடு வீசி அதை செய்வது மோசமான செயல். அம்பயர் ஏன் வைடு கொடுக்கவில்லை என்பதையும் அவரோ, ஐசிசி-யோ விளக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications