புனே : 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிராக மோத உள்ளது.
இந்தப் போட்டி நடக்கும் புனே மைதானத்தின் பிட்ச் கருப்பு மணல் கொண்டு தயார் செய்யப்பட்டால் இந்திய அணிக்கு சிக்கல் இல்லை.

ஆனால், சிவப்பு மணல் கொண்டு தயார் செய்யப்பட்டால் அது இந்திய அணிக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும். இதை அறிந்த பயிற்சியாளர் டிராவிட் புனே சென்ற உடன் எந்த தாமதமும் இன்றி மைதானத்துக்கு கிளம்பிச் சென்றார்.
இந்திய அணி, அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அடுத்து புனேவில் நடைபெற உள்ள போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக ஆட உள்ளது. இதற்காக ஞாயிறு அன்று மதியம் புனே சென்ற இந்திய அணி, அன்றும், அதற்கு மறுநாளும் ஓய்வு எடுத்துள்ளது.
போட்டி வியாழன் அன்று தான் நடைபெற உள்ளது என்பதால் இரண்டு நாட்கள் மட்டும் பயிற்சி செய்ய திட்டமிட்டது இந்திய அணி. ஆனால், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புனே சென்று இறங்கிய உடனே தன் வேலையை துவங்கினார். அதற்கு காரணம் புனே பிட்ச் எப்படி இருக்கப் போகிறது என்பதை வைத்தே இந்தப் போட்டியை இந்தியா அணுக வேண்டிய அவசியம் உள்ளது.
புனே ஆடுகளம் பொதுவாக பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரி என அழைக்கப்படும். ஆனால், தற்போது உலகக்கோப்பையில் அனைத்து ஆடுகளங்களிலும் இரண்டு மாதிரியான பிட்ச்கள் தயார் செய்யப்படுகின்றன. சிவப்பு மணல் வைத்து தயார் செய்யப்படுவது பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச். கருப்பு மணல் வைத்து தயார் செய்யப்படுவது பேட்டிங்கிற்கு அதிகம் ஒத்துழைக்கும் பிட்ச்.
புனேவில் எப்போதும் கருப்பு மணல் பிட்ச் தான் இருக்கும். ஆனாலும், இப்போது சிவப்பு மணல் கொண்டு தயார் செய்யப்படுகிறதா? என்பதை அறியவே கேப்டன் ரோஹித் சர்மா புனே வந்த பின் ஓய்வு எடுத்த நிலையில், பயிற்சியாளர் டிராவிட் தான் மட்டும் மைதானம் சென்று அங்கு இருந்த மைதான ஊழியர்களிடம் பிட்ச்சின் தன்மை குறித்து கேட்டு அறிந்தார்.
ஒருவேளை சிவப்பு மணல் பிட்ச் தயார் செய்யப்பட்டால், வங்கதேச அணிக்கு சாதகமான சூழல் ஏற்படும். வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் திறமையான சுழற் பந்துவீச்சாளர். ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் தனி ஆளாக எதிரணியின் முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்துவார்.
இதை உணர்ந்து பிட்ச் தன்மைக்கு ஏற்ப இந்திய அணியில் மாற்றம் செய்யவும், போட்டிக்கான திட்டத்தை தீட்டவும் டிராவிட் இதை செய்து இருக்கிறார். புனேவில் இருந்து வரும் தகவல்களின்படி கருப்பு மணல் கொண்ட பிட்ச் தான் இந்தப் போட்டிக்கு பயன்படுத்தப்படும் என தெரிகிறது.