புனே : இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்வுக்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம் என கூறப்படும் நிலையில், அவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா என முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இந்திய அணி உலகக்கோப்பைக்கான அணித் தேர்வில் சூர்யகுமார் யாதவை சேர்த்த போதே பலரும் அதை எதிர்த்து விமர்சனம் செய்தனர்.

ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தன்னால் நிதான ஆட்டமும் ஆட முடியும் என நிரூபித்து இரண்டு அரைசதங்களை அடித்தார் சூர்யகுமார் யாதவ்.
அதன்பின் அவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தொடர்ந்து இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில், அவர் மாற்று வீரராக ஆடுகளத்துக்கு வெளியே தான் அமர வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், முன்னாள் தேர்வுக் குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் ரோஹித் சர்மா எதற்காக மாற்று வீரர்களை அணியில் வைத்துள்ளார் என்பது பற்றி கூறி இருக்கிறார். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் யாருக்கு பதில் அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பது பற்றி விளக்கி இருக்கிறார்.
"ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வீரர்களை மாற்றி வருகிறார். சென்னையில் அஸ்வினை ஆட வைத்த அவர், அதிக ரன் குவிக்கும் ஆடுகளங்களில் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்பதால் ஆல் - ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு அணியில் இடம் அளித்தார்." என்றார் பிரசாத்.
"அதே போல, ஸ்ரேயாஸ் ஐயரை மாற்ற வேண்டும் என்றால் சூர்யகுமார் யாதவ் அந்த இடத்தில் ஆட வைக்கப்படுவார்" என்றார் பிரசாத். ஸ்ரேயாஸ் ஐயர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு தான் தன் பார்மை நிரூபித்தார். எனினும், அவர் தொடர்ந்து அதிக போட்டிகளில் இன்னும் ஆடவில்லை. அதனால், அவர் ஒருவேளை தொடர்ந்து போட்டிகளில் சொதப்பினால், அப்போது சூர்யகுமார் யாதவுக்கு அணியில் இடம் கிடைக்கும் என கூறி இருக்கிறார் பிரசாத்.