புனே : இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் போட்டியில் பங்கேற்பது போலவே நடந்து கொண்டார்.
ஆனால், இந்தப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. தான் போட்டியில் ஆடுவதாக இந்திய அணி நினைக்க வேண்டும் என்பதற்காகவே அவர் சில நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறார்.

முன்னதாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் காயம் அடைந்தார். அவருக்கு தொடையில் தசை நார் கிழிந்து பலத்த உள்காயம் ஏற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது.
இந்த நிலையில், போட்டி நடைபெறும் புனே மைதானத்துக்கு வந்தார் ஷகிப். போட்டியில் பங்கேற்பது போலவே ஹோட்டல் அறையில் இருந்து தன் கிரிக்கெட் பேட், உடைகள் உள்ளிட்டவை அடங்கிய பையை எடுத்துக் கொண்டு தான் மைதானம் வந்தார். அதை கண்ட வங்கதேச ஊடகங்கள் இந்தப் போட்டியில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்பது உறுதி என செய்திகளை பறக்க விட்டன.
அதன் பின் டாஸ் போட சில நிமிடங்கள் இருக்கும் முன்பு கூட ஷகிப் அல் ஹசன் பிட்ச்சை பார்வையிட சென்றார். அப்போது மைதானத்தில் இருந்த பத்திரிக்கையாளர்கள் ஷகிப் அல் ஹசன் ஆடுவது உறுதி என பரபரப்பாக செய்தியை அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
ஆனால், டாஸ் போடும் போது நழுவிய ஷகிப் அல் ஹசன் வீரர்கள் அறைக்குள் சென்று விட்டார். வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ தற்காலிக கேப்டனாக டாஸ் போட வந்தார். அப்போது தான் ஷகிப் அல் ஹசன் இந்தப் போட்டியில் ஆடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது.
ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக நசும் அஹ்மத் அணியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், ஏன் ஷகிப் அல் ஹசன் இப்படி நாடகம் ஆடினார் என்ற கேள்வி எழுந்தது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிக்கு முன்னதாக கூட இந்திய வீரர் அஸ்வின் இதே போல தீவிர பயிற்சியில் ஈடுபட்டு ,எதிரணியை குழப்பத்தில் வைத்திருந்தார்.
அதே போன்ற ஒரு செயலைத் தான் தற்போது ஷகிப் அல் ஹசனும் செய்துள்ளார். அவர் அறையிலேயே கூட இருந்திருக்கலாம் அல்லது மைதானம் வந்தாலும் அறையில் அமர்ந்து ஆலோசனைகள் சொல்வதோடு நிறுத்தி இருக்கலாம். ஆனால், அனைவரையும் குழப்பும் வகையில் நடந்து கொண்டார்.
ஷகிப் அல் ஹசன் இல்லாதது வங்கதேச அணிக்கு பெரிய பின்னடைவாகும். உலகின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவரான ஷகிப், நல்ல பேட்ஸ்மேனும் கூட. அவர் இல்லாமல் இந்திய அணியை எதிர்கொள்வது வங்கதேச அணிக்கு பெரிய சவால் தான்.