புனே : வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் காயத்துடன் இந்திய அணிக்கு எதிராக களமிறங்க துடித்தார். ஆனால், அது நடக்கவில்லை.
இந்தியாவுக்கு எதிராக் வென்றே தீர வேண்டும் என்ற வெறியில் அவர் தானே முன்னின்று ஆட வேண்டும் என நினைத்தார். தற்போது அவர் ஆசை நிறைவேறவில்லை.
அவரது காயம் மோசமாக இருந்ததால் அவர் இந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. மருத்துவர்கள் அவர் ஆடாமல் இருப்பதே நல்லது என அறிவுறுத்தியதால் அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார்.
சென்னையில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது ஷகிப் அல் ஹசனுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறினர்.
எனினும், அதை மீறி அவர் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் பேட்டிங் மட்டும் ஆடி பயிற்சி செய்தார்.
பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபடவில்லை என்றாலும், அவர் இந்தியாவுக்கு எதிராக களமிறங்க உறுதியாக இருந்தார். இதற்கு காரணம் கடந்த காலங்களில் எல்லாம் இந்தியாவுக்கு எதிராக வெற்றிக்கு அருக அருகே வந்து தோல்வியை சந்தித்து துவண்டு போனதுதான்.

கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் கூட வங்கதேசம் சிறப்பாக ஆடியது. எனினும், 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பின் இந்தியாவுடன் நான்கு போட்டிகளில் ஆடிய வங்கதேசம் அதில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஒரு வெற்றி ஆசிய கோப்பையில் கிடைத்தது. அப்படி இருந்தும் ஷகிப் அல் ஹசன், இந்தியாவை மீண்டும் வீழ்த்துவதில் உறுதியாக இருக்கிறார். இதற்கு இரண்டு காரணம் உள்ளது.
உலகக்கோப்பையில் வைத்து இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என ஷகிப் அல் ஹசன் நினைக்கிறார். அப்படி செய்தால் உலகின் சிறந்த கிரிக்கெட் அணியை வீழ்த்தி விட்டோம் என மற்ற அணிகளுக்கு எச்சரிக்கை மணி அடித்தது போல ஆகும்.
அதே சமயம், தற்போது உலகக்கோப்பை தொடரில் இன்னும் எந்த பெரிய அணியையும் வங்கதேசம் வீழ்த்தவில்லை. அதை உடைத்து இந்த உலகக்கோப்பையில் மூன்று போட்டிகளில் ஆடி தோல்வியே சந்திக்காத இந்திய அணியை வீழ்த்தினால் பெரிய அணியை வீழ்த்தி விட்டோம் என்ற பெயருடன், வங்கதேச அணியின் இளம் வீரர்களுக்கு பெரிய நம்பிக்கை கிடைக்கும்.
அதை வைத்து மீதமுள்ள போட்டிகளில் அந்த அணியால் வெற்றிகளை குவிக்க முடியும்.
இதைத் தவிர இந்திய அணி வீரர்களுக்கு கடந்த காலங்களில் ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் பெரிய அச்சுறுத்தலாக இருந்து இருக்கிறார். மிகவும் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னரான அவர் களத்தில் இருந்தால் அது இந்திய அணிக்கு நிச்சயம் அழுத்தம் கொடுக்கும்.
ஷகிப் அல் ஹசன் போட்டியில் ஆட விரும்பினாலும், மருத்துவர்கள் குழு அவரை ஆட அனுமதிக்கவில்லை என்பதால் அவரால் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. இது வங்கதேச அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது.