புனே : வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியின் ஷர்துல் தாக்குருக்கு கடைசி நேரத்தில் ஓவர் வழங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது ஷர்துல் தாக்குர் ரன்களை வாரி வழங்கினார். ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறிய நிலையில், பந்துவீச்சில் ரன் கொடுக்கும் வீரர் என தெரிந்தும் கேப்டன் ரோஹித் சர்மா அவரை நம்பி ஓவர் கொடுத்தார்.
ஆனால், ஷர்துல் தாக்குர் பெரும் ஏமாற்றத்தை அளித்தார். அந்த ஓவரில் அவர் 15 ரன்களை அள்ளிக் கொடுத்தார். இந்த நிலைக்கு காரணமே ஹர்திக் பாண்டியா தான்.
இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், ஹர்திக் பாண்டியா 9வது ஓவரை வீச வந்தார். மூன்று பந்துகளை வீசிய அவர் பீல்டிங்கின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டு, மைதானத்தை விட்டு வெளியேறினார். அவர் காயம் மோசமாக இருந்த நிலையில், அவரால் அதன்பின் பந்து வீசவும், பீல்டிங் செய்யவும் முடியாது என தகவல் வெளியானது.

9வது ஓவர் முடிந்த உடன் ஷர்துல் தாக்குர் 10வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் 2 சிக்ஸ், 1 ஃபோர் கொடுத்து 16 ரன்கள் கொடுத்து தன் கணக்கை தொடங்கினார். அவர் வீசிய முதல் மூன்று ஓவர்களின் முடிவில் 28 ரன்களை கொடுத்து இருந்தார். அவருக்கு தொடர்ந்து நான்காவது ஓவரை ரோஹித் சர்மா கொடுக்க மாட்டார் என அனைவரும் நினைத்த நிலையில், அவருக்கு நான்காவது ஓவர் கொடுத்தார் ரோஹித்.
அதற்கு முக்கிய காரணம், அதற்கு முந்தைய ஓவரில் குல்தீப் யாதவ் வங்கதேச அணியின் முதல் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். விக்கெட் விழுந்ததால் வங்கதேச அணி அடுத்த ஓவரில் பவுண்டரி அடிக்க யோசிக்கும் என்பதால் ஷர்துலுக்கு ஓவர் கொடுத்தார். அந்த ஓவரில் ரோஹித் நினைத்தது போலவே வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அதன் பின் பாண்டியா இல்லாத நிலையில் இடையிடையே ஓவர்கள் வீசினார் தாக்குர். 38வது ஓவருடன் 8 ஓவர் வீசி 44 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார் தாக்குர். அத்துடன் அவருக்கு இனி ஓவர் கிடைக்காது என எதிர்பார்த்த நிலையில், பும்ரா, சிராஜ் கடைசி நான்கு ஓவர்களை வீச வேண்டும் என்பதால் 46வது ஓவரை வீசினார் ஷர்துல் தாக்குர்.
அதுவே அவருக்கு கடைசி ஓவர் என்பது தெரிந்தும், கட்டுக் கோப்பாக வீச என்ன செய்யலாம் என யோசிக்காமல் அவர் அந்த ஓவரை அணுகினார். அந்த ஓவரில் 1 சிக்ஸ், 1 ஃபோர் உட்பட 15 ரன்கள் எடுத்தது வங்கதேசம். 41 முதல் 45வது ஓவர் வரை வெறும் 21 ரன்கள் அடித்து இருந்த வங்கதேசம், 46வது ஓவரில் மட்டும் 15 ரன்களை அள்ளியது.
பாண்டியா இல்லாததால் தாக்குரை நம்பி ஓவரை கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா நொந்து போனார். ஆனாலும், வேறு வழியில்லை என்பதால் அந்த ஓவரை கடந்து அடுத்த 4 ஓவர்களில் இந்தியா 31 ரன்களை விட்டுக் கொடுத்தது 50 ஓவர்களில் வங்கதேசம் 256 ரன்கள் குவித்தது.