லக்னோ : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டி நடைபெற உள்ள லக்னோ மைதானத்தின் பிட்ச் இந்தியாவுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்பெல்லாம் சொந்த அணிக்கு சாதகமாக பிட்ச் மாற்றும் சம்பவம் ரகசியமாக நடக்கும். இப்போது மிக வெளிப்படையாகவே நடந்துள்ளது.
லக்னோ மைதான ஊழியர் ஒருவர் இதை ஊடகத்திடம் கூறி இருப்பது மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. என்ன நடந்தது?
இந்தியா - இங்கிலாந்து அணிகள் உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ ஆடுகளத்தில் உலகக்கோப்பை லீக் போட்டியில் மோத உள்ளன. இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இல்லாததால் அணியில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், பிட்ச்சுக்கு ஏற்ற பந்துவீச்சாளர்களை அணியில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்ய லக்னோ மைதானத்திற்கு சென்ற போது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நேராக மைதானத்தின் பிட்ச் பொறுப்பாளர் சஞ்சீவ் அகர்வாலை சந்தித்துள்ளார்.
அதன் பின், இந்தியா - இங்கிலாந்து போட்டிக்காக தயார் செய்யப்பட்டு உறை போட்டு மூடி வைக்கப்பட்டு இருந்த பிட்ச்சை டிராவிட்டுக்கு திறந்து காட்டி இருக்கிறார்கள் அங்கிருந்த ஊழியர்கள். அதைப் பார்த்த டிராவிட், பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். அதன்படி பிட்ச்சில் பந்து அதிகம் பிட்ச் ஆகும் "குட் லென்த்" பகுதியில் இருந்த புற்கள் நீக்கப்பட்டது
சுமார் 20 நிமிடங்கள் அந்த பிட்ச்சில் மாற்றம் நடந்துள்ளது. அதை அருகே நின்று கவனித்து, புற்களை நீக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே ராகுல் டிராவிட் அங்கிருந்து சென்று இருக்கிறார். இந்த சம்பவத்தின் போது அங்கே இருந்த மைதான ஊழியர் ஒருவர் ஏன் டிராவிட் இதை செய்தார் என கூறினார்.
அவர் கூறுகையில், "கடந்த ஜனவரியில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து டி20 போட்டியின் போது இந்தியா 100 ரன்களை சேஸிங் செய்யவே தடுமாறியது. அப்படி எதுவும் இப்போது நடந்து விடக் கூடாது என்பதில் டிராவிட் உறுதியாக இருந்தார். குட் லென்த் பகுதியில் புற்கள் இல்லாமல் இருப்பதால் இது நிச்சயம் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். அதே சமயம் பேட்டிங் செய்யவும் சாதகமாக இருக்கும். இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தால் இந்தியா அதிக ஸ்கோர் அடிக்க முடியும்" என்றார்.
இந்த சம்பவம் மூலம் இந்தியா தனக்கு சாதகமாக பிட்ச்சை மாற்றி இருப்பது தெரிகிறது. இங்கிலாந்து அணி இந்த விவகாரத்தை ஊடகங்களிடம் பேசினால், அதனால் தேவையற்ற சர்ச்சை ஏற்படும். எல்லா அணிகளும் தங்களுக்கு சாதகமாக பிட்ச்சை மாற்றும். ஆனால், இப்படி வெட்டவெளிச்சமாக அதை செய்ய மாட்டார்கள். அங்கே தான் ராகுல் டிராவிட் சிக்கி இருக்கிறார்.
பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றப்பட்டு இருப்பதால் இந்தியா மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்க வாய்ப்பு உள்ளது. அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்களுடன் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.