தரம்சாலா : 2023 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோத உள்ள போட்டியில் அஸ்வின் ஆட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அஸ்வின் அணியில் சேர்க்கப்பட சிறிய வாய்ப்பு இருந்தது.
ஆனாலும், அஸ்வினை சேர்க்க இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்றே தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் பிட்ச் தான்.
இந்தப் போட்டி நடக்க உள்ள தரம்சாலா மைதானத்தில் அதிக புற்கள் கொண்ட பிட்ச் தான் அமைக்கப்படும். அது போன்ற பிட்ச்கள் பொதுவாக பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும். அதே சமயம் வேகப் பந்துவீச்சுக்கும் சாதகமாக இருக்கும். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு 20 ஓவர்களுக்கு மேல் அந்த பிட்ச்சில் வேலை இல்லை.

அதாவது, முதல் 15 ஓவர்கள் மற்றும் கடைசி 10 ஓவர்கள் நிச்சயம் வேகப் பந்துவீச்சாளர்களை தான் பந்து வீச வைக்க வேண்டும். அதைத் தவிர்த்த மத்திய ஓவர்களில் மட்டுமே சுழற் பந்துவீச்சை பயன்படுத்த முடியும். அணியில் ஏற்கனவே குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக அஸ்வின் தேவை இல்லை.
மேலும், பாண்டியா வேகப் பந்துவீச்சாளர். தரம்சாலா பிட்ச் வேகப் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பிட்ச். இந்த சூழ்நிலையில், பாண்டியாவிற்கு மாற்றாக ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்வதே சரியான விஷயமாக இருக்கும். எனவே, முகமது ஷமி அணியில் சேர்க்கப்பட இருக்கிறார். அதே சமயம், பாண்டியாவின் பேட்டிங்கை ஈடு கட்ட வேண்டி சுமாராக பந்து வீசி வரும் ஷர்துல் தாக்குர் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த இரண்டு மாற்றங்களை தவிர்த்து அணியில் வேறு மாற்றங்கள் இருக்காது என கூறப்படுகிறது. பிட்ச் மற்றும் பாண்டியாவுக்கான சரியான மாற்று வீரர் இல்லை என்பதால் அஸ்வின் இந்தப் போட்டியில் ஆட வாய்ப்பு இல்லை.